அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறை ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறை ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது!

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறை இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


அனைத்து பள்ளிகளிலும், இந்த கல்வியாண்டு தொடக்கத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை வரவிருப்பதால்,  மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், ஆசிரியர், ஆசிரியைகள் எண்ணிக்கை, ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை தயாரித்து வருகின்றனர்.


இந்த நிலையில் முதற்கட்டமாக 3,688 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், 4,040 மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்த பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது. 


இதை செயல்படுத்துவதற்காக அரசு பள்ளி ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்ப முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  அதன்படி ஆதாரில் உள்ள முழு விவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள் இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட உள்ளது.


தனி சாப்ட்வேரில் இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அமைச்சுப் பணியாளர்கள், கணினி பயிற்றுநர்களுக்கு பயோமெட்ரிக் முறை அமல்படுத்துவதற்கான பயிற்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.


இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 
பயோமெட்ரிக் வருகைபதிவேடு அமல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விவரங்களை பதிவு செய்வதற்காக தற்போது அமைச்சுப்பணியாளர்கள், கணினி பயிற்றுநர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. 


இந்த பயிற்சி மொத்தம் 24 கல்வி மாவட்டங்களில் வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அந்தந்த மாவட்டங்களுக்கு பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் இந்த முறை அமல்படுத்தப்படும், இவ்வாறு அவர்கள் கூறினர். 

மூலக்கதை