அமெரிக்காவில் பாரதிதாசன் பெயரில் முதல் அமைப்பு - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அமெரிக்காவில் பாரதிதாசன் பெயரில் முதல் அமைப்பு  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்று தன் புரட்சிகரமான சிந்தனைகளால் புது ரத்தம் பாய்ச்சிய 

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பெயரில் அமெரிக்காவில்  முதன்முதலாக டெலவர் மாநிலத்தில் ஏப்ரல் 20 , 2019 (சித்திரை 7, தி.ஆ. 2050) சனிக்கிழமை அன்று "புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்" என்கிற புதியதோர் அமைப்பு தொடக்கவிழா மற்றும் அவரது 129 வது பிறந்தநாள் நாள் விழா சிறப்பாக நடைப்பெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், திருமிகு. பிரிசில்லா ரேபன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அடுத்து "புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்" தொடக்கவிழா நிகழ்ச்சி கோலாகலமாக, அரங்கத்தில் இருந்த அனைவரது கரவொலியோடு தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்த  தெற்காசியத்துறை பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்.  வாசு அரங்கநாதன், வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் முன்னாள் தலைவர் முனைவர். முத்துவேல் செல்லையா மற்றும் நியூயார்க் தமிழ்க்கல்விக் கழகத்தின் தலைவர் முனைவர் பாலா சாமிநாதன் ஆகியோர் புரட்சிக்கவிஞரின் படத்தை திறந்துவைத்து தமிழ் மன்றத்தை தொடக்கிவைத்தனர்.

மன்றத்தின் நோக்கக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர்  திருமிகு. துரைக்கண்ணன் அவர்கள் திறம்பட எடுத்துரைத்தார். 

தொடர்ந்து, டெலவரில் இயங்கும் சலங்கை நடனப்பள்ளியின் நிறுவனர் திருமிகு. இந்துமதி கோபாலகிருஷ்ணன் அவர்களின் பயிற்சியில், சிறார்கள், பாரதிதாசனின் "சங்கே முழங்கு" பாடலுக்கு சிறப்பாக நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். மாணவி சிந்தியா மணி மற்றும் மாணவன் இலக்கணன் சுபாஷ் தனித்தனியே பாரதிதாசன் பாடல்களை இசையோடு பாடினார்கள்.  

திருமிகு. விஜய் அவர்களின் ஒருங்கிணைப்பில் வாசிங்டன் மரபிசைக்குழு பம்பை, தவில் போன்ற தமிழ் மரபுக்கருவிகளைக் கொண்டு இசை விருந்து அளித்தனர். தொடர்ந்து டெலவர் கலைக் குழுவும், அடவு கலைக் குழுவும் இணைந்து  முழங்கிய பறையிசை நிகழ்ச்சி அரங்கத்தை அதிர வைத்தது. இதனை திருமிகு. ஹென்றி மற்றும் திருமிகு ரமா அவர்கள் ஒருங்கினைத்து பயிற்சி அளித்தனர்.

சமூக ஊடகம் மூலமாக புரட்சிக்கவிஞரின் வாழ்வியல் தொடர்பாக நேயர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஒருங்கிணைப்பாளர் திருமிகு. பிரசாத் பாண்டியன் அவர்கள் பதிலளித்து உரையாடினார்.  அடுத்து, பாரதிதாசனின் புலமையும், சமூக சிந்தனையும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம், சிறப்பு விருந்தினர் முனைவர் வாசு அரங்கநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் "தமிழியக்கம்" தலைப்பில் திருமிகு. பன்னீர்செல்வம், "இயற்கை" தலைப்பில் திருமிகு. தீபக், "சமூகம்" தலைப்பில் திருமிகு. கிருஷ்ணன், "கல்வி" தலைப்பில் திருமிகு. செந்தில்முருகன் மற்றும் "பெண்ணியம்" தலைப்பில் திருமிகு. ம.வீ.கனிமொழி ஆகியோர் பேசினார்கள்.

பாரதிதாசனின் வாழ்வியல் குறித்து  முனைவர் முத்துவேல் செல்லையா அவர்களும், தமிழ் மொழி மீதிருந்த பாரதிதாசனின் பற்று மற்றும் பகுத்தறிவு சிந்தனைகள் குறித்து முனைவர் பாலா சுவாமிநாதன் அவர்களும் பேசினர்.

முன்னதாக மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு, அதில் 7 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில்  முதல் பரிசு  செல்வன். துருவேஷ், இரண்டாம் பரிசு செல்வன். ஆதித் இராஜ்குமார், மூன்றாம் பரிசு ஜெசிகா ரேபன் ஆகியோர் பெற்றனர்.  8 வயது முதல் 12 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதல் பரிசு செல்வன். கெளதம்ராஜ் புவனேஷ், இரண்டாம் பரிசு செல்வன். அறிவாற்றல் இராஜ்குமார், மூன்றாம் பரிசு செல்வி. கனிஅன்பு துரைக்கண்ணன்  ஆகியோர் பெற்றனர்.

பெரியோர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் பரிசு திருமிகு. மெர்லின் தீபன், இரண்டாம் பரிசு திருமிகு. பிரிசில்லா ரேபன், மூன்றாம் பரிசு திருமிகு. விஜயலக்ஷ்மி மற்றும் திருமிகு. நரசிம்மன் ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்  சிறப்பு விருந்தினர்கள் கையால் வழங்கப்பட்டது. 

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் டெலவரில் உள்ள "ரஜினி தென்னிந்திய உணவகம்" மதிய உணவை வழங்கி சிறப்பித்தது. 

ஒருங்கிணைப்பாளர் திருமிகு இராஜ்குமார் கலியபெருமாள் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.  முடிவில் ஒருங்கிணைப்பாளர் திருமிகு. பிரசாத் பாண்டியன் நன்றியுரை கூற, விழா இனிதே முடிந்தது.

 

-இராஜ்குமார் கலியபெருமாள்

மூலக்கதை