இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் 5 இந்தியர்கள் பலி: சுஷ்மா சுவராஜ் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் 5 இந்தியர்கள் பலி: சுஷ்மா சுவராஜ் தகவல்

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில், 5 இந்தியர்கள் பலியாகி உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 290க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தாக்குதலில் 3 இந்தியர்கள் பலியாகியிருப்பதாக நேற்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த பலி எண்ணிக்கை இன்று ஐந்தாக உயர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கை தொடர் வெடிகுண்டு சம்பவத்தில் லஷ்மி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய மூன்று இந்தியர்கள் பலி என நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் இருவர் பலியாகியுள்ளனர் என்ற தகவல் இந்தியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பலியான இரண்டு இந்தியர்களின் பெயர்கள் ஹனுமந்த்ராயப்பா மற்றும் ரங்கப்பா என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 35 பேர் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

.

மூலக்கதை