விடுதலை புலிகள் மோதலுக்குப்பின் மிகப்பெரிய சம்பவம்: இலங்கை குண்டுவெடிப்பில் 160 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
விடுதலை புலிகள் மோதலுக்குப்பின் மிகப்பெரிய சம்பவம்: இலங்கை குண்டுவெடிப்பில் 160 பேர் பலி

கொழும்பு: விடுதலை புலிகள் மோதலுக்குப்பின் இன்று இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 160 பேர் பலியாகிய நிலையில், 450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அடுத்தடுத்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துக்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் கிறிஸ்துவ மக்களால், இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, இலங்கையின் தலைநகரான கொழும்பின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வந்தன. சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஆரம்பித்த சிறப்புப் பிரார்த்தனை நள்ளிரவு வரை நீடித்தது.

நள்ளிரவில் இயேசு உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக நடத்தி காண்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 8. 45 மணியளவில் தலைநகர் கொழும்பு பகுதியில் உள்ள கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் கிறிஸ்தவ மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. குண்டு வெடித்ததில் தேவாலயத்தின் மேற்கூரைகள் பெரும்பகுதி சேதமடைந்தன. பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள், அலறியடித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர்.

ஆனால், குண்டு வெடிப்பின் அதிர்ச்சியில் பலரும் அங்கேயே வீழ்ந்தனர்.   படுகாயத்துடன் இருந்தவர்கள் ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல், கொழும்புவில் 6 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நடந்தது.

ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில், குண்டுவெடிப்பு நடந்ததால் சர்ச்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அதேபோல் குண்டுகளை செயலிழக்க ெசய்யும் பிரிவினர் மற்றும் விசேஷ அதிரடிப்படையினர் உள்ளிட்ட சில பாதுகாப்பு பிரிவுகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும், கொழும்பில் உள்ள ஷாங்ரி லா நட்சத்திர விடுதியிலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அங்கு தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 160 பேர் பலியானதாகவும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் இலங்ைகயில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் காயமடைந்தவர்கள் காவு வண்டியூடாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இலங்கை முழுவதும் உள்ள தேவாலய பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த குண்டுவெடிப்பால் இலங்கையின் தலைநகரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில், 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் அடங்கும்.

அதன்படி, கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், காட்டுவாபிட்டியா தேவாலயம், பாட்டிகாலோ தேவாலயம், கொழும்பு நகரின் ஷங்கிரி லா ஓட்டல், சின்னாமன் கிராண்ட் ஓட்டல், கிங்ஸ்புரி ஓட்டல் ஆகிய 6 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. மேற்கண்ட இடங்களில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இலங்கை - விடுதலைப்புலிகள் மோதலுக்கு பின்னர் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இதுவரை எந்த ஒரு அமைப்பும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்ேபற்காததால், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், சில வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தலைவர்கள் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பதற்றம் நீடிப்பதால், இலங்கை அதிபரும், பிரதமரும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

வெடிகுண்டு சம்பத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள்

 இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தூதரக அதிகாரிகளுடன் இதுகுறித்து பேசி வருகிறோம்.

 
 இலங்கையில் செயல்பட்டு வரும், இந்திய தூதரகம் வௌியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இலங்கையில் உள்ள இந்தியர்கள் +94 777903082, +94 112422788, +94 112422789, +94 777902082, +94 772234176 ஆகிய அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பதிவில், ‘இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் விரைவாக இந்த நிகழ்வில் இருந்து மீண்டு வர பிரார்த்திக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இலங்கை அரசின் கல்வித்துறை அமைச்சர் அகில விவராஜ் காரியவசம் வெளியிட்ட செய்தியில், ‘நாடு முழுக்க பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், நாளை மற்றும் நாளை மறுதினம் இரு நாட்களும், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

 இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில், அரசின் உயர்மட்டக் குழு கூட்டம் கொழும்பில் நடைபெற்று வருகிறது.

குண்டு வெடிப்பின் பின்னணி பற்றி அதில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், சம்பவம் நடந்த பகுதியானது புலன்விசாரணை அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.


 கடந்த 10 நாட்களுக்கு முன்பு, இலங்கையில் பெரும் தாக்குதல் நடத்த சில அமைப்பினர் சதி திட்டம் தீட்டியுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. ஆனால், இலங்கை போலீஸ் நிர்வாகம் போதிய பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
ஈஸ்டர் தினத்தை குறிவைத்து குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதால், இதற்கான சதிதிட்டம் பல நாட்களாக தீட்டப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவலை மகாண போலீஸ் தலைவர் புஜித் ஜெயசுந்தரா உறுதிபடுத்தி உள்ளார்.

  இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இலங்கை மக்கள் மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் இலங்கை மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை இன்று மாலை கூட்ட, அழைப்பு விடுத்துள்ளார்.
 ஏஎப்பி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் வௌிநாட்டைச் சேர்ந்த பயணிகள் ஆவர்.

தொடர்ந்து மற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை போலீஸ் தலைவர் தெரிவித்த தகவலின்படி, இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தற்கொலை படையினர் செயல்பட்டிருக்கலாம் என்றும், அந்த செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.


 கொழும்பு தேசிய மருத்துவமனை செய்தி தொடர்பாளர் கூறுைகயில், ‘‘குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகாயத்துடன் 450க்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான ரத்தம் கொடையாளர்கள் வரவேற்கப்படுகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.



 முன்னதாக 6 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்காக நகர்பகுதி முழுவதும் போலீசார் போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.

மேலும், நகரம் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்ததால், பதற்றமான சூழ்நிலை நிலவியது.
 ஜனாதிபதியும், எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச கூறுகையில், ‘‘குண்டு வெடிப்பு சம்பவமானது, மனிதாபிமானமற்ற செயல்.

கொழும்பு கொச்சிகடை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்ேடன். இந்த நேரத்தில் பொதுமக்கள் அமைதிகாத்து, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.


 இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இது நாட்டில் குழப்பத்தை உண்டாக்க எடுக்கப்பட்ட முயற்சி. இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.

 குண்டு வெடிப்பு சம்பவத்தால், கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையம் வரும் பாதையில் சோதனைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், விமான நிலைய பார்வையாளர் பகுதி மூடப்பட்டுள்ளது.

விமானப் பயணிகளை தவிர ஏனையவர்கள் வளாகத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘இலங்கையில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நமது பிராந்தியத்தில் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்திற்கு இடமில்லை.

இலங்கையில் உள்ள மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது. காயமடைந்தவர்களுடனும் துயருற்ற குடும்பங்களுடனும் என் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.


 இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இலங்கையில் சின்னமன் ஓட்டலில் நான் தங்கியிருந்தேன். அங்கே இருந்து இப்போது கிளம்பினேன்.

நான் கிளம்பிய சற்று நேரத்தில் குண்டு வெடித்துள்ளது. நம்ப  முடியவில்லை.

அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு ராதிகா தெரிவித்துள்ளார்.




.

மூலக்கதை