பிளஸ்-2 தேர்வு முடிவு 19-ந்தேதி வெளியாவதாக அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
பிளஸ்2 தேர்வு முடிவு 19ந்தேதி வெளியாவதாக அறிவிப்பு!

பிளஸ்-2 தேர்வு முடிவு 19- ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவு பெற்றது.

மதிப்பெண் பட்டியலும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு, புனித வெள்ளி அன்று வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அன்று தேர்வு முடிவு வெளியிடுவதை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. திட்டமிட்டபடி 19-ந் தேதி காலை 9.30 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. 

இதற்கான ஆயத்த பணிகளில் அரசு தேர்வுத்துறை ஈடுபட்டு வருகிறது.பிளஸ்-2 தேர்வு முடிவு குருந்தகடு (சிடி) ஆகவோ, கம்ப்யூட்டரில் பிரிண்ட் செய்து பள்ளிகளுக்கும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பத்திரிகை, செய்தி நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

அந்த முறையை இந்த வருடமும் பின்பற்றி தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகிறது. அதேபோல மாணவர்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவு தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பள்ளிகளோ, மாணவர்களோ தேர்வு முடிவை தெரிந்துகொள்ள கல்வி அலுவலகங்களுக்கு செல்லத் தேவையில்லை. மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை மதிப்பெண், ரேங்க் வாரியாக தெரிவிக்கும் முறை கடந்த 2 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகள் பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறை கொண்டு வரப்பட்டது.

இது குறித்து அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது:

பிளஸ்-2 தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப் படும். மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.

பள்ளிகளுக்கும் ஆன்லைன் வழியாக மாணவர்களின் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் அனுப்பி வைக்கப்படும். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் பேட்டியோ, அறிவிப்போ வெளியிட இயலாது. பத்திரிகை, டிவி செய்தி நிறுவனங்களுக்கும் இணைய தளம் வழியாக தேர்வு முடிவு அனுப்பப்படும். அதனால் யாரும் நேரில் வரத்தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை