பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பண மதிப்பு நீக்கம் தொடர்பாக புதிய வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்க பழைய ₹500, ₹1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதன் பிறகு வங்கிகளில் இவற்றை பொதுமக்கள் மாற்ற அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், பலர்  தங்களிடம் இருந்த செல்லாத நோட்டை சட்ட விரோதமாக மாற்றியுள்ளனர். இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள காங்கிரஸ், இது தொடர்பான வீடியோக்களை, கடந்த மார்ச் 26 மற்றும் கடந்த 9ம் தேதி வெளியிட்டது. கடந்த 9ம் தேதி வெளியிட்ட வீடிேயாவில் ராகுல் ரத்தரேகர் என்பவர், சட்ட  விரோதமாக பணத்தை மாற்ற உதவியது பதிவாகியிருந்தது. இதன் பிறகு கேபினட் செகரட்டேரியேட் வெளியிட்ட விளக்கத்தில், ராகுல் ரத்தரேகர் கேபினட் செகரட்டேரியேட்டில் காவலர் நிலையில் பணியாற்றியவர். பண மதிப்பிழப்புக்கு பிறகு, பழைய நோட்டுகளை சட்ட விரோதமாக  மாற்ற உதவிய குற்றத்துக்காக 2017 ஜூன் மாதம் இவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என தெரிவித்திருந்தது.  இந்நிலையில் புதிய வீடியோவை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்  கூறியதாவது:  பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு, பழைய நோட்டுகளை பலர் சட்ட விரோதமாக மாற்றியுள்ளனர். வங்கி அதிகாரிகள் துணையுடன் இந்த மோசடிகள் நடந்துள்ளன. இத்தகையவர்களை மத்திய அரசு பாதுகாத்து  வருகிறது. இப்படிப்பட்ட செயல்கள் நடந்தபோது, ‘காவலாளி’ ஏன் தூங்கி விட்டார்?  மோசடிகள் நடந்துள்ளதற்கு இந்த வீடியோக்களே ஆதாரம். எவ்வளவு பணம் இப்படி மோசடியாக மாற்றப்பட்டுள்ளது என்பதை இதில் தெரிந்து ெகாள்ளலாம். ஆனால், ஆதாரம் அளித்த பிறகும் இவற்றின் மீது விசாரணை  நடத்தாமல் மத்திய அரசு அவர்களை பாதுகாத்து வருகிறது. கருவூலம் மற்றும் ஏழைகள் பணத்தை கொள்ளையடிக்க இந்த பணமதிப்பிழப்பு உதவியுள்ளது என்றார்.

மூலக்கதை