உலக கோப்பை மாற்று வீரர்களாக பன்ட், ராயுடு, சாய்னி

தினகரன்  தினகரன்
உலக கோப்பை மாற்று வீரர்களாக பன்ட், ராயுடு, சாய்னி

மும்பை: ஐசிசி உலக கோப்பை போட்டித் தொடருக்கான இந்திய அணியின் மாற்று வீரர்களாக  ரிஷப் பன்ட், அம்பாதி ராயுடு, நவ்தீப் சாய்னி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் அடுத்த மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இளம் வீரர் பன்ட், ராயுடு தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை கிளப்பியது. பன்ட்டுக்கு ஆதரவாக கவாஸ்கரும், ராயுடுவுக்கு ஆதரவாக கங்குலியும் கருத்து தெரிவித்திருந்தனர்.இடம் கிடைக்காத விரக்தியில், ‘உலக கோப்பை போட்டியை பார்க்க 3டி கண்ணாடியை ஆர்டர் செய்திருக்கிறேன்’ என்று ராயுடு ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில், ‘ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு இருந்தது போல மூன்று மாற்று வீரர்களை வைத்துள்ளோம். பேட்ஸ்மேன்கள் பன்ட், ராயுடு மற்றும் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சாய்னி காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். யாருக்காவது காயம் ஏற்பட்டு விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்’ என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை