ராஜராஜ சோழன் சமாதியை அகழ்வாராய்ச்சி செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ராஜராஜ சோழன் சமாதியை அகழ்வாராய்ச்சி செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ராஜராஜ சோழன் சமாதியில் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசன் முதலாம் ராஜராஜ சோழன் கிபி 985 முதல் கிபி 1014 வரையில் ஆட்சி புரிந்தார். இவரது இயற்பெயர் அருள்மொழிவர்மன். இவரது ஆட்சிக் காலத்தில் நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்துத் துறைகளும் சிறந்து விளங்கின.

இதற்கான சான்றுகளாக தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்டவை உள்ளன.  இவருடைய ஆட்சியும், கட்டிடக்கலையும் இன்றுவரை  உலக அளவில் அனைவராலும் பாராட்டப்பட்டு புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது.

ஆனால், இவருடைய சமாதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற கிராமத்தில் கேட்பாரற்று பராமரிப்பு இல்லாமல் சிதைந்து கிடக்கிறது. இந்தக் கிராமத்தைச் சுற்றி ஆரியப்படை, சோழப்பட்டை, சோழமாளிகை, பட்டீஸ்வரம் போன்ற கிராமங்கள் உள்ளன.

இங்கு இவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் மாளிகைகள் உள்ளன. இங்கு முறையாக தொல்லியல் துறை ஆய்வு செய்தால் சோழர்களின் வரலாற்றுச் சான்றுகள் பல கிடைக்கும்.

மிகப்பெரும் சாம்ராஜ்யத்தைக் கட்டியமைத்த ராஜ ராஜ சோழனின் சமாதியின் இன்றைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் பிற மாநிலங்களில் அந்த மாநிலத்தில் புகழ் பெற்றவர்களுக்கு அவர்களின் புகழைப் பரப்ப சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

உதாரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் சத்ரபதி சிவாஜி சிலையை அரபிக்கடலில் ரூ.4,900 கோடி செலவில் நிறுவியுள்ளது. இதுபோலவே குஜராத் மாநில அரசு  சர்தார் வல்லபாய் படேலின் சிலையை ரூ.3 ஆயிரம் கோடி செலவில் நிறுவியுள்ளது. மாமன்னர் ராஜ ராஜ சோழனின் சிலையை அதேபோன்று இந்தியப் பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிறுவ வேண்டும்.

அவரது சமாதி உள்ள இடத்தில் மணிமண்டபம் கட்டி அதனை அனைவரும் பார்த்து அறியும் விதமாக சுற்றுலாத்தலமாக அறிவிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர்  ஆகியோரின் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் கூறப்பட்டதாவது:

''உடையாளூர் பகுதியில் ராஜராஜ சோழன் அடக்கம்  செய்யப்பட்டது என்பதற்கான முழுமையான ஆதாரம் இல்லை. தொல்லியல் துறை தரப்பில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ராஜராஜ சோழன் புதைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதா? என்று நவீன உபகரணங்களை கொண்டுதான் ஆய்வு செய்ய வேண்டும்''  
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், அகழ்வாராய்ச்சி செய்யாமல் மேலோட்டமாக அவ்வாறு கூறக்கூடாது. தமிழக அரசின் தொல்லியல்  துறையின் உயர்மட்டக் குழுவினர் தற்போதைய நவீன தொழிற்நுட்பங்கள், உபகரணங்களைக் கொண்டு, ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அகழாய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மூலக்கதை