தெருநாய்களுக்கு உணவளித்ததால் மூன்றரை லட்சம் அபராதம்: அதிர்ச்சியில் மும்பை இளம்பெண்
மும்பை: மும்பையில் தெருநாய்களுக்கு உணவளித்தவருக்கு மூன்றரை லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கண்டிவாலியில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வரும் இளம்பெண் நேகா தத்வானி என்பவர் விளம்பர நிர்வாகியாக வேலை செய்து வருகிறார். விலங்குகள் மீது பேரன்பு கொண்ட நேகா தத்வானி, சொசைட்டிக்குள் உலா வரும் தெருநாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார்.தெருநாய்களுக்கு உணவளிப்பது குறித்து பலமுறை எச்சரித்தும், அபராதம் விதித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், ஒன்று திரண்ட குடியிருப்புவாசிகள், வளாகத்துக்குள் தெருநாய் வளர்த்தால் அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். அதன் அடிப்படையில் நேகா தத்வானிக்கு மும்பை ஹவுசிங் சொசைட்டி 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அபராத தொகையை செலுத்த மாட்டேன் என தெரிவித்துள்ள நேகா, விரைவில் அங்கிருந்து வீட்டை காலி செய்ய உள்ளதாக கூறியுள்ளார். மும்பை ஹவுசிங் சொசைட்டியின் இந்த நடவடிக்கைக்கு பலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.