‘ஏப்ரல் 18ல் மோடி அரசுக்கு முடிவு’
சென்னை: மனித நேய ஜனநாயக கட்சி சார்பில், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மண்ணடி தம்புச்செட்டி தெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில்மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ பேசியதாவது:
இதையடுத்து, தமிமுன் அன்சாரி பேசுகையில், “மத்தியில் ஆளும் மோடி அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. அரசியலில் பிரிவினைவாதத்தை தூண்டுபவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களால் என்றுமே பிரச்னைதான்.
மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக தான் நாங்கள் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறோம்.
இந்துக்கள், முஸ்லிம்கள் என ஒருபோதும் பிரித்து பார்த்ததில்லை. நாங்கள் சகோதரர்களாகவே பழகுகிறோம்.
ஆனால் மோடி அரசு பிரிவினைவாதத்தை தூண்டி, மக்களிடையே கிளர்ச்சியை உருவாக்கி ஆட்சிக்கு வரலாம் என்ற எண்ணத்தில் செயல்படுகிறது. இதற்கெல்லாம் முடிவுகட்டும் நாள் வரும் 18ம் தேதி. மத்தியில் ஆளும் மோடி அரசு தூக்கி எறியப்படும்.
மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் அமரும்” என்றார். கூட்டத்தில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
.