பிரித்தானியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கை தமிழர்! சந்தேக நபர் கைது

PARIS TAMIL  PARIS TAMIL
பிரித்தானியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கை தமிழர்! சந்தேக நபர் கைது

 

பிரித்தானியாவின் ஹாரோ தென் பகுதியில் உயிரிழந்தவர் இலங்கை தமிழரான நாற்பது வயதான விமல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
காலில் காயங்களோடு இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த நிலையில் காணப்பட்ட அவருக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காது அவர் இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
நேற்று  முன்தினம் மாலை 3.20 மணியளவில் வட மேற்கு லண்டனில் ஹாரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
வலம்புரி காஷ் அண்ட் கரி என்ற கடையில் ஒருவர்  கத்திக்குத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
 
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அந்த பகுதியில் கத்தியுடன் ஓடித்திரிந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
 
இந்நிலையில் கத்திக்குத்துக்கு உள்ளானர் மீட்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து , இறந்தவர் தமது கடைக்கு ஓடி வந்து கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டதாகவும் அரை மணி நேரம் கழித்தும் வெளியே வராத காரணத்தால் தாம் அங்கு சென்று பார்த்த போது அவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் கடையின் பணியாளர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் எல்லா இடங்களிலும் இரத்தம் காணப்பட்டதாகவும் உடனே பொலிசாருக்கும் நோயாளர் காவு வண்டிக்கும் தான் தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்தார். .
 
தமது சி.சி.டிவி கமராக்களை பொலிசார் பார்வையிட்டதாகவும் அதில் உயிரிழந்தவர் - காலில் இரத்தக் காயத்துடன் சாதாரணமாகவே நடந்து சென்றது பதிவாகியுள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
 
உயிரிழந்தவர் தமது கடைக்கு அருகிலுள்ள பலசரக்குக் கடையில் வேலைபார்த்து வந்தவரெனவும் எப்பொழுதும் தமது கடைக்கு வந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருப்பார் எனவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
 
அவர் நல்ல மனிதன் என்றும் வன்முறைகளில் ஒருபோதும் ஈடுபடாதவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர் ஒரு இலங்கை தமிழர்  என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
இதேவேளை இவரது மரணம் குறித்து பிரேதப் பரிசோதனையின் பின்னரே தீர்மானிக்க முடியும் என ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 
ந்த சம்பவத்தின்போது கத்தி பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து இன்னமும் அறியப்படவில்லை என்றும் வேறு வகையான ஆயுதங்கள் எவையும் சம்பவ இடத்துக்கு அருகில் காணப்படவில்லை எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
அத்தோடு சம்பவம் தொடரிபில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

மூலக்கதை