கனடாவை திட்டமிட்டு பழிவாங்கும் சவுதி! வெளியாகிய ஆதாரம்

PARIS TAMIL  PARIS TAMIL
கனடாவை திட்டமிட்டு பழிவாங்கும் சவுதி! வெளியாகிய ஆதாரம்

மகளிர் உரிமை ஆர்வலர்கள் சவுதி அரேபியாவால் கைது செய்யப்பட்டதை கனடாவின் வெளியுறவு அமைச்சர் கண்டித்ததையடுத்து சவுதி அரேபியா எப்படி கனடாவை பழி வாங்குகிறது என்பதை விவரிக்கும் அரசு ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
 
தகவலறியும் சட்டத்தின் கீழ் பிரபல பத்திரிகை ஒன்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.
 
கனடாவின் வெளியுறவு அமைச்சரான Chrystia Freeland, சவுதி அரேபியா, மகளிர் உரிமை ஆர்வலர்களை கைது செய்ததை கண்டித்து டுவீட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் சவுதிக்கு பல நாடுகளிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன.
 
இதனால் ஆத்திரமுற்ற சவுதி அரேபியா, கடந்த ஓகஸ்டில் கனடாவுடனான தனது தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. அத்துடன் கனேடிய தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியதுடன், தனது தூதரையும் சவுதி திரும்ப அழைத்துக் கொண்டது.
 
அதுமட்டுமன்றி தனது எதிர்கால வர்த்தகம், முதலீட்டு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை முடித்துக் கொண்டதோடு தானிய இறக்குமதியையும் சவுதி நிறுத்தி விட்டது.
 
மேலும், கனடாவில் படிக்கும் தனது குடிமக்களுக்கான புலமைப் பரிசில்களை நிறுத்தப்போவதாக அறிவித்ததோடு, சவுதி வங்கியும், கனடாவிலுள்ள தனது சொத்துக்களை விற்கத்தொடங்கியது என கனேடிய அரசு அளித்துள்ள அந்த ஆவணத்தில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை சவுதி அரேபிய அரசு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே, தற்போது கனடாவுடன் சவுதி செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களுக்குப் பதிலாக வேறு நாடுகளிடம் ஒப்பந்தம் கேட்டுள்ளது. இராணுவ தளங்களுக்கு அணுகல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கனேடிய மருந்துப் பொருட்கள் நிறுவனம் ஒன்றிற்கு மருந்துகளை இறக்குமதி செய்யவும் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து கப்பலில் அனுப்பப்பட்ட பல்வேறு பொருட்கள் முழுமையாக சவுதி துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 
இத்தனை நடவடிக்கைகளையும் கனடாவை பழிவாங்கும் வகையில் எடுத்துள்ள சவுதியின் தீவிரத்தை ஒரே மாதத்திற்குள் உணர முடிந்ததாக கனேடியத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

மூலக்கதை