சுழலில் மூழ்கியது ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றியுடன் தொடங்கியது சிஎஸ்கே

தினகரன்  தினகரன்
சுழலில் மூழ்கியது ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றியுடன் தொடங்கியது சிஎஸ்கே

சென்னை : ஐபிஎல் டி20 கிரிக்கெட் 12வது சீசனின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கி உள்ளது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.டோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார். தொடக்க போட்டியைக் காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் திரண்டதால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. ரசிகர்களின் ஆரவாரத்துக்கிடையே ஆர்சிபி தொடக்க வீரர்களாக கேப்டன் கோஹ்லி, பார்திவ் பட்டேல் இருவரும் களமிறங்கினர். கோஹ்லி 6 ரன் மட்டுமே எடுத்து அனுபவ ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் பிடிபட, ஆர்சிபி அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. இதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே மொயீன் அலி, டி வில்லியர்ஸ் இருவரும் தலா 9 ரன் எடுத்து ஹர்பஜன் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த ஹெட்மயர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார் (ரன் அவுட்). இதைத் தொடர்ந்து இம்ரான் தாஹிர் - ஜடேஜா சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் துபே 2, கிராண்ட்ஹோம் 4, சாய்னி 2, சாஹல் 4, உமேஷ் 1 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய பார்திவ் பட்டேல் 29 ரன் எடுத்து (35 பந்து, 2 பவுண்டரி) பிராவோ பந்துவீச்சில் கேதார் வசம் பிடிபட, பெங்களூர் அணி 17.1 ஓவரிலேயே 70 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிராஜ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கே பந்துவீச்சில் ஹர்பஜன், தாஹிர் தலா 3, ஜடேஜா 2, பிராவோ 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 71 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ஆர்சிபியும் பந்துவீச்சில் மிரட்டிப் பார்த்தது. சிஎஸ்கே துவக்க ஆட்டக்காரர் வாட்சன் 10 பந்தில் ரன் ஏதுமின்றி சாஹல் சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த அம்பாதி ராயுடு, ரெய்னா நிதானமாக ஆடினர். இந்த ஜோடி 38 ரன் சேர்த்த நிலையில் ரெய்னா (19 ரன்) மொயீன் அலி சுழலில் வெளியேறினார். மறுமுனையில், விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருந்த ராயுடு 42 பந்தில் 28 ரன் எடுத்து சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். மிக குறைவான இலக்கு என்பதால் ஆர்சிபி பந்துவீச்சாளர்களால் சிஎஸ்கேவுக்கு நெருக்கடி கொடுக்க முடிந்ததே தவிர, சிஎஸ்கேவின் வெற்றியை பறிக்க முடியவில்லை. கேதார் ஜாதவ், ஜடேஜா இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். சிஎஸ்கே -17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 71- ரன் எடுத்து வெற்றி பெற்றது. கேதார் ஜாதவ் 13, ஜடேஜா 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி தரப்பில் சாஹல், மொயீன் அலி, சிராஜ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.  சிஎஸ்கே வெற்றியுடன் தொடரை தொடங்கியதால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ரெய்னா 5,000நேற்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா 15 ரன்களை கடந்தபோது ஐபிஎல் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடரில் இதுவரை 177 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார்.

மூலக்கதை