கவலையில் சந்திரபாபு நாயுடு: என்.டி.ஆர்., படம் ஏற்படுத்துமா கலகம்
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி நிறுவனருமான, என்.டி.ஆர்., என்றுஅழைக்கப்படும், என்.டி. ராமாராவின் வாழ்க்கை தொடர்பான சினிமாவை வெளியிடுவதற்கு, ஆந்திரா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இந்த மாநிலத்தில், லோக்சபா தேர்தலோடு, சட்டசபை தேர்தலும் நடக்க உள்ள நிலையில், இந்த படம் வெளியாக உள்ளது, முதல்வர், சந்திர பாபு நாயுடுவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து, புகழ் பெற்றவர், ஆந்திராவைச் சேர்ந்த, மறைந்த நடிகர், என்.டி.ஆர்., குறிப்பாக, கிருஷ்ணன், ராமர் என, ஹிந்துக் கடவுள் வேடங்களில் அவர் நடித்த படங்கள், மாபெரும் வெற்றிகளைப் பெற்றன. அவரை, கடவுளாகவே, ஆந்திர மக்கள் போற்றினர்.