ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் மூன்று இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட 12 வயது சிறுவனை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீரின் பண்டிப்போரா மாவட்டத்தில் உள்ள ஹஜின் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்தனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு வீரர்களும் தாக்குதல் நடத்தினார்கள். இரவு முழுவதும் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனிடையே தீவிரவாதிகள் இரண்டு பேரை பிணை கைதியாக பிடித்து வைத்திருந்தனர். அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டார். மற்றொரு பிணைக் கைதியான 12 வயது சிறுவனை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதேபோல் சோபியான் மாவட்டத்தில் இமாம்சாகிப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.  இதனிடையே பாரமுல்லா மாவட்டத்தின் சோப்பூர் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை வீரர்கள் மேற்கொண்டுள்ளனர். இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

மூலக்கதை