ரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது

தினகரன்  தினகரன்
ரெப்கோ வங்கி வர்த்தகம் 15,000 கோடியை தாண்டியது

சென்னை: ரெப்கோ வங்கி, தனது பொன்விழா ஆண்டில், சிறப்பு மிக்க மைல்கல்லான 15,000 கோடி வர்த்தகத்தை கடந்துள்ளது. வங்கியின் வைப்பு நிதி 8,669 ேகாடி மற்றும் கடன் 6,337 கோடி உள்ளது. தொடர்ந்து லாபம் ஈட்டும் நிறுவனமாக செயல்பட்டு, கடந்த 5 ஆண்டாக 100 கோடிக்கு மேலான நிகர லாபத்தை கொண்டு செயல்படும் இந்த வங்கி, நடப்பு நிதியாண்டில் 110 கோடிக்கு மேலான நிகர லாபமும், பங்குதாரர்களுக்கு 20 சதவீத ஈவுத்தொகை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளது. தாயகம் திருப்பியவர் நலனுக்காக தொடங்கப்பட்ட இந்த வங்கி, தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை மூலம், அவர்களுக்கு கல்வி, மருத்துவ உதவித்தொகை, ஆயுள் காப்பீடு செயல்படுத்தி வருகிறது. இவற்றுக்காக 7.20 கோடி செலவழித்து, தாயகம் திரும்பிய 37,500 பேர் பயன் பெற்றுள்ளனர். இது ரெப்கோ வங்கி வரலாற்றிலேயே முதல் முறை.ரெப்கோ வங்கியின் மற்றொரு குழு நிறுவனமான ரெப்கோ நுண்கடன் நிறுவன வர்த்தகம் நடப்பு நிதியாண்டில் 1,000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் மூலம் சுயஉதவிக்குழுவை சேர்ந்த 5 லட்சம் மகளிர் பயன் பெற்றுள்ளனர். இதுபோல், ரெப்கோ வீட்டுக்கடன் நிறுவனம் தற்போது 10,666 கோடி வர்த்தகமும், சுமார் 75,500 வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது என ரெப்கோ வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆர்.எஸ்.இசபெல்லா தெரிவித்தார். இவர் கடந்த பிப்ரவரியில் மேலாண்மை இயக்குநராக பொறுப்பேற்றார்.அதன்பிறகு தாயகம் திரும்பியோருக்கு பல்வேறு நலத்திடங்களை செயல்படுத்தியுள்ளார் என வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை