பொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை

தினகரன்  தினகரன்
பொதுத்துறை பங்குகள் இலக்கை தாண்டி விற்பனை

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் 85,000 கோடி திரட்டியுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 5,000 கோடி அதிகம். நலிவடைந்த பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த வகையில் நடப்பு ஆண்டில் மட்டும் பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் 80,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது.ஆனால், நிர்ணயிக்கபட்ட இலக்கையும் தாண்டி 85,000 கோடி வசூல் ஆகியுள்ளதாக, நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். சிறிய முதலீட்டாளர்கள் பொதுத்துறை இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஏற்ப, பொதுத்துறை இடிஎப் (சிபிஎஸ் இடிஎப்) திட்டத்தை 2014ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதில் வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட 22 நிறுவன பங்குகள் உள்ளன. முதன் முதலாக 2014 மார்ச்சில் வெளியிடப்பட்ட பங்குகள் மூலம் 3,000 கோடி திரட்டப்பட்டது. இந்த திட்டத்தின் நடப்பு நிதியாண்டில் இதுவரை 5 பங்குகள் வெளியீடு மூலம் 9,500 கோடி திரட்டப்பட்டுள்ளது. ஆர்இசி பிஎப்சி பங்கு விற்பனை மூலம் 14,500 கோடி திரட்டப்பட்டது. அடுத்த நிதியாண்டுக்கான இலக்கு 90,000 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை