35 மகிழுந்துகளை சேதமாக்கிய 74 வயது முதியவர்!!
கடந்த சில வாரங்களாக பல மகிழுந்துகளை சேதமாக்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கைது சம்பவம் நேற்று வியாழக்கிழமை Nîmes நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த நகரில் உள்ள வதிவிடம் ஒன்றில் உள்ள பல மகிழுந்துகள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டும், கீறல்கள் ஏற்படுத்தப்பட்டும் சேதமாக்கப்பட்டிருந்தன. இதுவரை 35 மகிழுந்துகளுக்கு மேல் இதுபோல் சேதமாக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளியை காவல்துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை அதே பகுதியில் முதியவர் ஒருவர் கண்மூடித்தனமாக மகிழுந்துகளை சேதமாக்கிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சில பாடசாலை மாணவர்கள் இதனை நேரில் கண்டனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் குறித்த முதியவரை கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்தினர். அதன்போது, காவக்துறையினர் தேடிவந்த குற்றவாளி இவர் தான் என தெரியவந்துள்ளது. இதுவரை 35 மகிழுந்துகளை காரணமே இன்றி சேதப்படுத்தியுள்ளார்.