ஜி.எஸ்.டி.யால் தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

PARIS TAMIL  PARIS TAMIL
ஜி.எஸ்.டி.யால் தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யால் தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பாரிவேந்தரை ஆதரித்து பிரசாரம்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவருமான பாரிவேந்தரை ஆதரித்து முசிறியில் நேற்று இரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நாடு ஒரு மோசமான சூழ்நிலையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. நமது உரிமை பறிக்கப்பட்டு, ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது என்றால், அது தமிழ்நாட்டு மக்கள் செய்த மிகப்பெரிய தவறே காரணம்.

தவறான மனிதர்கள்

மத்தியிலும், மாநிலத்திலும் தவறான மனிதர்கள் ஆட்சியில் உள்ளனர். தவறான மனிதர்கள் என்ற வார்த்தை சரியா? தவறா? என பலமுறை யோசித்து ‘சரிதான்’ என்ற முடிவுக்கு வந்த பின்னரே இங்கு பதிவு செய்கிறேன். நரேந்திர மோடியோ, எடப்பாடி பழனிசாமியோ சரியான மனிதர்கள் அல்ல. மத்தியில் மோடி ஆட்சியாக இருந்தாலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியாக இருந்தாலும் மக்களை பற்றி சிந்திப்பதில்லை.

குஜராத்தில் மோடி முதல்-மந்திரியாக இருந்தபோது நடந்த படுகொலைகளை யாரும் மறக்க முடியாது. அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், மோடியை பதவி விலக அறிவுறுத்தினார். அப்போது, வேண்டாம் என சமாதானம் செய்தவர் தான் அத்வானி. அந்த அத்வானி இப்போது எங்கே என தேடிக்கொண்டிருக்கும் நிலை உள்ளது. மோடி சுயநலத்திற்காக எதையும் செய்வார். எடப்பாடி பழனிசாமியை பற்றி சொல்லவே வேண்டாம். எனவே தான் இருவரையும் தவறான மனிதர்கள் என்றேன்.

பொல்லாத ஆட்சிக்கு சாட்சி

பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளுங்கட்சியினர் சம்பந்தப்பட்டு உள்ளனர். தற்போது நடவடிக்கை இருக்கிறதோ இல்லையோ, நாம் ஆட்சிக்கு வந்ததும் உரிய தண்டனை பெற்றே தீருவார்கள். பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாச்சி கொடூரம். ஜெயலலிதாவின் பங்களா உள்ள கோடநாட்டில் காவலாளி உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். ஏன்? அங்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் அமைச்சர்கள் நடத்திய பேரம், கமிஷன், ஆதாரங்களை ஜெயலலிதா சேகரித்து வைத்திருந்தார். அதை வெளிவராமல் தடுக்கவே இந்த கொலைகள்.

மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் 100 பேர் உயிரிழந்தனர். வெளிநாட்டு கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக வாக்குறுதி அளித்தார் மோடி. ஆனால், 15 ரூபாய்கூட செலுத்தப்படவில்லை. பிரதமராக இருந்து இதுவரை 84 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்கான செலவு ரூ.1,500 கோடி. அது யார் வீட்டு பணம்? நாட்டு மக்களின் வரிப்பணம். மோடி இந்திய பிரதமரா? அல்லது வெளிநாட்டு பிரதமரா? என்பதை சிந்திக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வந்த பிறகு தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

நம் கையில் மாநில அரசு. நாம் கைகாட்டுவதே மத்திய அரசு. நாடு நலம்பெற வாக்களிப்பீர் உதயசூரியன்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

மூலக்கதை