தேர்தல் முடிவு வந்த 24 மணி நேரத்தில் ஆட்சி மாற்றம்: துரைமுருகன் திட்டவட்டம்
வேலூர்: வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி. எம். கதிர்ஆனந்த் அறிமுக கூட்டம், வேலூரில் நேற்று நடந்தது. டி. எம். கதிர்ஆனந்தை அறிமுகப்படுத்தி திமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது: கதிர்ஆனந்த் சென்னையில் படித்து அமெரிக்காவில் எம்பிஏ பட்டம் பெற்றார். அங்கு 1. 5 லட்சம் டாலர் தருகிறேன் என்றார்கள்.
ஆனால் அதை ஒதுக்கிவிட்டு கூழே குடித்தாலும் ஊரில்தான் இருப்பேன் என்று வந்து விட்டார். எனது மகன் நன்கு ஆங்கிலம் பேசுவார்.
பார்லிமென்டில் ஆங்கிலத்தில், இந்தியில் பேச வேண்டும். எனக்கு தெரிந்து பார்லிமென்டில் இங்கிருந்து சென்றவர்களில் ஜி. விசுவநாதனுக்கு பிறகு யாரும் பேசவில்லை.
கதிர்ஆனந்த் ஆங்கிலத்தில் மணிக்கணக்கில் பேசக்கூடிய திறமை பெற்றவர். அதைவிட கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.
நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதால்தான் ஒரே தொகுதியில் 10 முறை நின்று வெற்றிபெற்றுள்ளேன்.
அதேபோல் கதிர்ஆனந்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். வேலூர் மாநகராட்சியில் தற்போது வரியை உயர்த்தியுள்ளனர்.
நான் சொல்கிறேன். தேர்தல் முடிந்தவுடன் கதிர்ஆனந்த் டெல்லிக்கு செல்வார்.
அங்கு ராகுல் பிரதமராக அமர்ந்தவுடன், ஒரே வாரத்தில் ஸ்டாலின் முதல்வர் ஆவார். அடுத்த நொடியே வரி உயர்வு ரத்து செய்யப்படும்.
தேர்தல் முடிவு வந்த 24 மணி நேரத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். அந்த வேலையை என்னிடம் விட்டு விடுங்கள்.
அது எனக்கு கைவந்த கலை. ஓபிஎஸ்சை பார்த்து நான், ‘நீங்கள் முதல்வராக இருங்கள்’ என்று கூறினேன்.
அடுத்த நொடி கட்சி 2 ஆக உடைந்தது.
ஒருவர் சீட்டுக்காக எங்களிடமும், அவர்களிடமும் பேசினார். அதை போட்டு உடைத்தேன்.
அதனால் அங்கு இப்போது 4 சீட்டுடன் அவர்கள் கதை முடிந்தது. அதுபோல் 18 தொகுதி இடைத்தேர்தல் முடிந்ததும் நமது ஆட்சி வரும்.
30 எம்எல்ஏக்கள் அப்போது இடம்மாறி வந்து உட்காருவார்கள். அந்த ஆற்றல் எனக்கு உண்டு.
இவ்வாறு அவர் பேசினார். ஓபிஎஸ்சை பார்த்து நான், ‘நீங்கள் முதல்வராக இருங்கள்’ என்று கூறினேன்.
அடுத்த நொடி கட்சி 2 ஆக உடைந்தது.
.