இரட்டை இலை லஞ்ச வழக்கு டிடிவி.தினகரனின் குரல் சோதனை நடத்தப்படுமா?: ஏப்ரல்.30ல் ஐகோர்ட் விசாரணை

தினகரன்  தினகரன்
இரட்டை இலை லஞ்ச வழக்கு டிடிவி.தினகரனின் குரல் சோதனை நடத்தப்படுமா?: ஏப்ரல்.30ல் ஐகோர்ட் விசாரணை

புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்தைப் பெற தலைமை தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரனின் குரலை சோதனை செய்வது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் ஏப்ரல் 30ம் தேதி விசாரணை நடத்துகிறது. இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரது நன்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி. தினகரனுக்கு தீஸ்ஹசாரே மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திர சேகர் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் பேசிய ஆடியோவை டெல்லி குற்றவியல் போலீசார் ஒப்படைத்து அதுகுறித்து விரிவான விசாரணை நடத்த டிடிவி.தினகரனின் குரலை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு டிடிவி.தினகரன் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டார். இந்த ஆடியோக்கள்  ஜோடிக்கப்பட்டவை ஆகும். வழக்கே முற்றிலும் அரசியல் சூழ்ச்சி காரணமாக தொடரப்பட்டது என்பதால் இதுகுறித்து தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என மனுவில் டிடிவி  குறிப்பிட்டிருந்தார்.இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சுனில் கவுர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து டிடிவி.தினகரன் குரல் மாதிரி தொடர்பான வழக்கை ஏப்ரல் 30ம் தேதி விசாரிப்பதாக நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து மேற்கண்ட வழக்கில் டிடிவி.தினகரனின் குரல் சோதனை நடத்தப்படுமா? என்பது குறித்து அன்றைய விசாரணையில் தெரியவரும். இதைத்தவிர இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கை மார்ச் 27ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை