முறைகேட்டில் ஈடுபட்ட பீகார் ஆசாமி யார்? தராதரத்தை தாழ்த்தி கொள்ளாதீங்க மிஸ்டர்!: சந்திரபாபு நாயுடு பேச்சால் பிரசாந்த் கிஷோர் ஆவேசம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முறைகேட்டில் ஈடுபட்ட பீகார் ஆசாமி யார்? தராதரத்தை தாழ்த்தி கொள்ளாதீங்க மிஸ்டர்!: சந்திரபாபு நாயுடு பேச்சால் பிரசாந்த் கிஷோர் ஆவேசம்

ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், ‘தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஒரு கிரிமினல் அரசியல் நடத்தி வருகிறார். காங்கிரசில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தும் அவர் சட்டப்பேரவை உறுப்பினர்களை கவர்ந்துள்ளார்.

பீகார் ஆசாமி பிரசாந்த் கிஷோர் ஆந்திராவில் இருந்து லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கி உள்ளார். அவர் ஆந்திராவில் படிவம் 7 மூலம் முறைகேடு நடத்தி உள்ளார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு உதவியாக இருக்கிறார். அது மட்டும் அன்றி ஐதராபாத் நகரில் நடைபெற்ற லட்சக்கணக்கானோர் விவரங்கள் திருட்டுக்கு பின்னணியிலும் அவர் இருக்கிறார்’ என்று பேசினார்.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள தலைவர் பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பதிவில், ‘தரமற்ற வார்த்தைகளை பேசி உங்கள் தராதரத்தை தாழ்த்திக் கொள்வதை நிறுத்துங்கள்.

இதன் மூலம் உங்களுக்கு பீகார் மாநிலத்தின் மீது உள்ள பாரபட்சமும், உங்கள் தீமையான எண்ணமும் வெளிப்பட்டுள்ளது. இவ்வாறு பேசுவதை நிறுத்தி விட்டு ஆந்திராவில் மீண்டும் மக்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டியதை கவனியுங்கள்.

தேர்தலில் படுதோல்வி அடைந்தால் ஒரு நல்ல அரசியல்வாதியும் பாழாகி விடுவார். எனவே சந்திரபாபு நாயுடுவின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் எனக்கு வியப்பை அளிக்கவில்லை’ எனக்கூறியுள்ளார்.   சந்திரபாபு நாயுடுவின் கருத்துக்கும், அதற்கு எதிர்வினையாக பிரசாந்த் கிேஷார் கருத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால், ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


.

மூலக்கதை