கோவா சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க.வின் பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசு வெற்றி

தினகரன்  தினகரன்
கோவா சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க.வின் பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசு வெற்றி

பனாஜி: கோவா சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பா.ஜ.க,வின் பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா மாநில முதல்வராக இருந்த மனோகர் பரீக்கர் சமீபத்தில் காலமானார். இதைத் தொடர்ந்து, கோவா மாநில புதிய முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த பிரமோத் சாவந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை முதல்வர்களாக மஹாராஷ்டிர கோமந்தக் கட்சியை சேர்ந்த சுதீன் தவாலிகர் மற்றும் கோவா பார்வர்டு கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசாய் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேற்று அதிகாலை, இவர்கள் பதவியேற்றனர். இந்நிலையில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி, கவர்னர் மிருதுளா சின்ஹாவுக்கு கடிதம் மூலம் பிரமோத் சாவந்த் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற கவர்னர், இன்று காலை 11.30 மணிக்கு சட்டசபை சிறப்பு கூட்டத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார். 40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபையின் பலம் தற்போது 36 ஆக உள்ளது. இதில் பா.ஜ.வின் பிரமோத் சாவந்த் அரசுக்கு ஆதரவாக 20 பேரும், எதிராக 15 பேரும் ஓட்டளித்தனர். இவர்களில் 14 பேர் காங்கிரஸ் கட்சியையும், ஒருவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்தவர். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மூலக்கதை