2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவிப்பு

லக்னோ: 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்தியாவின் பிரதமரைத் தேர்வு செய்வதில் இந்த மாநிலத்தின் பங்கு முக்கியமானதாகும். எனவே, தேசியக் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்களாக அறியப்படுகிறவர்கள் உத்தரப்பிரதேசத்திலிருந்து போட்டியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச்சத்தின் இரு பெரும் பிராந்தியக் கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இந்தமுறை கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்த இரு கட்சிகளும், உ.பி.யில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்று அறிவித்துள்ளன. இந்த நிலையில், லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் நான் வெற்றிபெறுவேன் என்று எனக்கு தெரியும். பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக, சமாஜ்வாடி மற்றும் ஆர்.எல்.டியுடன் வலிமையான கூட்டணி அமைத்துள்ளோம். நான் ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதைவிட நாம் அதிக தொகுதிகளில் வெற்றிபெறுவதே முக்கியம். நம் கட்சியை வலுப்படுத்துவதற்காக, முன்னர் ஒருமுறை ராஜ்யசபா எம்.பி பதவியை நான் ராஜினாமா செய்துள்ளேன். எனவே, தற்போதுள்ள சூழ்நிலையை மனதில்கொண்டு இந்தமுறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். எனது முடிவை கட்சியினர் ஏற்றுக்கொள்வார்கள் என கூறியுள்ளார். மாயாவதியின் இந்த அறிவிப்பு பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி, ராகுலை தவிர்த்து பிரதமர் பதவிக்கான போட்டிகளில் ஒருவராக கருதப்படுபவர் மாயாவதி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை