மோடி ‘மீன்ஸ்’ மசூத், ஒசாமா, தாவூத், ஐஎஸ்: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அதிரடி தாக்கு
கடந்த இரு நாட்களுக்கு முன் பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரை ‘சவுகிதார்’ நரேந்திர மோடி என்று மாற்றினார். அதாவது நானும்கூட காவலாளிதான் என்று பெயரை மாற்றினார்.
நாட்டில் ஊழலுக்கு எதிராகவும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடும் அனைத்து மக்களும் காவலாளிதான் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பெங்களூருவில் கூறியதாவது: மோடி ‘சவுகிதார் நரேந்திர மோடி’ என்று வெளியிட்டு, நானும்கூட காவல்காரன் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகளைச் செய்தவர் மோடி. அவர் அதில் சிக்கியதும், இந்த தேசத்தையே காவல்காரராக்கிவிட்டார். இதற்கு முன் ஒருமுறை கூட இந்த தேசத்தை காவலாளியாக்கப் போகிறேன் என்று கூறியதில்லை.
மக்கள் என்னை பிரதமராக்கவில்லை, என்னை காவல்காரராக்கி இருக்கிறார்கள் என்று கூறினார்.
ஆனால், இப்போது, ஒட்டுமொத்த தேசத்தையே காவல்காரராக்கி இருக்கிறார்.
யாருக்கு மோடி காவல்காரராக இருந்திருக்கிறார் ?. அனில் அம்பானி, மெகுல் சோக்சி, நீரவ் மோடி ஆகியோருக்குத்தான் பிரதமர் மோடி காவல்காரராக இருந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா கூறுைகயில், ‘‘மக்களவைத் தேர்தலுக்காக பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டோம்.
இந்தத் தேர்தலில் பாஜவையும், மோடியையும் வீழ்த்துவதே எங்களின் குறிக்கோள். மோடி (MODI) என்பதற்கு எம் - மசூத் அசார், ஓ - ஒசாமா பின்லேடன், டி - தாவூத் இப்ராஹிம், ஐ - ஐஎஸ்ஐஎஸ் என்று அர்த்தம்’’ என்றார்.
இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜ செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா, ‘பிரதமர் மோடி குறித்து பவன் கேரா கூறிய கருத்துகள் கண்டனத்துக்குரியது. இதற்கு காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோர வேண்டும். இதுதொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு பதிவு தபாலில் புகார் அளித்துள்ளோம்’’ என்றார்.