தெலங்கானா மாநிலத்தில் அரசியல் கூத்து வந்தா கூண்டோடு வாங்க...இல்லாட்டி வேணாம்!: கவிதாவிடம் சரணடையும் காங். எம்எல்ஏக்கள்
தெலங்கானாவில் மொத்தம் உள்ள 19 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 8 பேர் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியில் இணையப் போவதாக அறிவித்திருந்த நிலையில், மூன்றில் இரண்டு பங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள், டிஆர்எஸ் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக மக்களவை எம். பி. யும், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகளுமான கே. கவிதா தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில், 19 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
தற்போது மக்களவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏற்கனவே வெற்றிப்பெற்ற 19 எம்எல்ஏக்களில் 8 பேர், தெலுங்குதேசம் கட்சிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் பரவின. அதையடுத்து, மாநில காங்கிரஸ் தலைமை, ‘எம்எல்ஏக்கள் சொந்த கட்சியை விட்டு, தங்கள் கட்சிக்கு வருவதை டிஆர்எஸ் ஊக்குவிக்கிறது’ என குற்றம்சாட்டியது.
இதுகுறித்து ஆளுநரிடம் புகார் அளிக்கவுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
எம்எல்ஏக்கள் கட்சி தாவுவதை டிஆர்எஸ் ஊக்குவிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு குறித்து, மக்களவை எம்பியும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகளுமான கவிதாவிடம் கேட்டபோது, ‘‘மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்வதை பார்த்து, காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏக்களும் டிஆர்எஸ் கட்சியில் சேர விரும்புகின்றனர். மொத்தம் உள்ள எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்களுக்கும் அதிகமானோர் எங்கள் கட்சிக்கு வரவிரும்பினால் மட்டுமே நாங்கள் எங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்வோம்.
ஒன்று அல்லது இரண்டு எம்எல்ஏக்கள் எங்கள் கட்சிக்கு வர விருப்பம் தெரிவிக்கும்போது நாங்கள் அதை தவிர்த்து விடுவோம்’’ என்றார்.