சபரிமலையில் தரிசனம் செய்ய மேலும் 6 பெண்கள் முயற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலையில் தரிசனம் செய்ய மேலும் 6 பெண்கள் முயற்சி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில தினங்களாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து இளம் பெண்கள் தரிசனத்துக்கு வருகின்றனர். இவர்களை  கர்மசமிதி தொண்டர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.

கடந்த 3 தினங்களில் மட்டும் ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த 4 இளம் பெண்கள்  தரிசனத்துக்கு வந்தனர். இந்த நிலையில் நேற்று ஆந்திராவில் இருந்து 30 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.

இவர்களில் 6 இளம் பெண்களும் இருந்தனர். பம்பையை தாண்டி அவர்கள்  சன்னிதானத்துக்கு சென்றுகொண்டிருந்தனர்.

மரக்கூட்டம் பகுதியில் வைத்து கர்ம சமிதி தொண்டர்கள் அவர்களை கவனித்தனர்.

உடனடியாக தொண்டர்கள்  திரண்டு இளம் பெண்களை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

சத்தம் கேட்டு அங்கு மேலும் பக்தர்கள் திரண்டனர். இதனால் 6 இளம் பெண்களும் பம்பைக்கு திரும்பினர்.

தற்போது தேர்தல் நேரம் என்பதால் இளம் பெண்களை தடுத்து நிறுத்துகிறவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என போலீசுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் இளம் பெண்களை தடுத்த கர்மசமிதி தொண்டர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

.

மூலக்கதை