தண்டனையில் இருந்து தப்பினார் அனில் அம்பானி

தினமலர்  தினமலர்
தண்டனையில் இருந்து தப்பினார் அனில் அம்பானி

புதுடில்லி: எரிக்சன் நிறுவன வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 459 கோடி ரூபாய் செலுத்தி, சிறை செல்வதை தவிர்த்தார், அனில் அம்பானி.

அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்’ நிறுவனம், தொலை தொடர்பு சாதனங்களை கொள்முதல் செய்த வகையில், ஸ்வீடனைச் சேர்ந்த, எரிக்சன் நிறுவனத்திற்கு, 550 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. இத்தொகையை, உறுதி அளித்தபடி, அனில் அம்பானி தரவில்லை. அதனால், எரிக்சன் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

அதில், ‘ஏற்கனவே கோர்ட்டில் டிபாசிட் செய்த, 118 கோடி ரூபாய் தவிர்த்து, நான்கு வாரங்களில், எரிக்சன் நிறுவனத்திற்கு, 459 கோடி ரூபாய் வழங்க தவறினால், அனில் அம்பானி மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’ என, பிப்., 20ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, கூடுதலாக செலுத்திய, 260 கோடி ரூபாய் வரியை, திரும்பத் தர, வரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என, அம்பானி கோரினார்.இதற்கு, கடன் தந்த வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அம்பானி மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு அளித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது.

இதையடுத்து, அனில் அம்பானி, கோர்ட் உத்தரவுப்படி, பணம் செலுத்துவாரா அல்லது பணம் செலுத்த முடியாமல் சிறை செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், நேற்றிரவு ரிலையன்ஸ் குழுமம், எரிக்சனுக்கு செலுத்த வேண்டிய, 459 கோடி ரூபாயை செலுத்தி, அனில் அம்பானியை நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை