அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்! டெஸ்ட் தொடர் இரத்து

PARIS TAMIL  PARIS TAMIL
அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்! டெஸ்ட் தொடர் இரத்து

 

நியூஸிலாந்தில் நடைபெற்ற கொடூர துப்பாக்கி சூட்டு தாக்குதலையடுத்து, நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
 
ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக, நியூஸிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி, நாளை கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ள, மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் விளையாட இருந்தது.
 
இந்த நிலையில், வீரர்களின் பாதுகாப்பு கருதி இத்தொடரை இரத்து செய்வதாக, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, அறிவித்துள்ளது.
 
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவிருந்த, இப்போட்டியில் விளையாடுவதற்காக அங்கு சென்றிருந்த வீரர்கள், இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக கிறிஸ்ட் சர்ச் நகரில் டீன்ஸ் அவ் பகுதியில் ஹெக்லி பார்க் அருகே உள்ள மிகப்பெரிய மசூதிக்கு தொழுகைக்கு சென்றுள்ளனர். இந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
குறித்த மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்த போது, மசூதிக்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் தொழுகை நடத்திக்கொண்டிருந்த மக்களை நோக்கி, இயந்திர துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார்.
 
இதனால், தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்கள் பலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற போதிலும், இதுவரை 9 பேரிலிருந்து 29 வரையிலான பேர் கொல்லப்பட்டதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுவொரு தீவிரவாத தாக்குதல் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இதன்போது, சொகுசுப் பேருந்து ஒன்றில் மசூதிக்கு அழைத்து வரப்பட்ட வீரர்கள், மசூதி வளாகத்துக்குள் சில வீரர்களும், பல வீரர்கள் பேருந்திலும் அமர்ந்திருந்தபோது, மசூதிக்குள் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.
 
இதைக் கேட்டதும், மசூதி வளாகத்துக்குள் சென்ற பங்களாதேஷ் வீரர்கள் சிலர் அங்கிருந்து தப்பி வெளியே ஓடினார்கள். பின்னர் பேருந்தில் இருந்த வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிலிருந்த வீரர்களும் ஓடி விடுத்திக்குச் சென்று உயிர் தப்பினார்கள்.
 
இது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் ஜலால் யூனுஸ் கூறுகையில்,
 
“அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தொழுகைக்குச் செல்வதற்காக சொகுசுப் பேருந்தில் மசூதிக்கு வந்தோம். மசூதி வளாகத்துக்குள் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடந்ததால் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினோம். யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால், அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். வீரர்கள் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
 
பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பால் டுவிட்டரில் கூறுகையில், ‘துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களிடம் இருந்து ஒட்டுமொத்த அணியும் தப்பியது. மிகவும் பதற்றத்துடன், அச்சத்துடன் இருக்கிறோம். தொடர்ந்து பிரார்த்திக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
 
மற்றொரு வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் டுவிட்டரில் கூறுகையில், “அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அனைவரையும் கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டில் இருந்து காத்துவிட்டார். நாங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் கூறுகையில், “நியூஸிலாந்தில் இதற்கு முன் இதுபோன்ற மோசமான வன்முறைச் செயல்கள் நடந்ததில்லை. அதற்கு இடமும் இல்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் இன்று நடந்த வன்முறைச் செயலை நியூஸிலாந்தின் கறுப்பு நாள் என்று சொல்வேன்.
 
மக்கள் சுதந்திரமாக தங்கள் வழிபாட்டை நடத்தி வந்த இடத்தில், பாதுகாப்பாக இருந்த இடத்தில் இந்த மோசமான துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இந்த செயலைச் செய்தவர்கள் திட்டமிட்டு இதை நிகழ்த்தியுள்ளார்கள். இதுபோன்ற செயலுக்கு நியூஸிலாந்து சமூகத்தில் இடமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
 
இச்சம்பவத்தை அடுத்து, திட்டமிட்டபடி நாளை போட்டி தொடங்குமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, நியூஸிலாந்து சபையுடன் இது தொடர்பாகப் பேசியது. இதன்பிறகு, 3ஆவது டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
இதேவேளை கிறிஸ்ட் சர்ச்சில் அமைந்துள்ள இன்னொரு மசூதியான லைன்வுட் மஸ்ஜித் மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மூலக்கதை