நியூசிலாந்தை உலுக்கிய துப்பாக்கிச் சூடு! உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
நியூசிலாந்தின் மையப்பகுதி என்றழைக்கப்படும் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இச்சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது
இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் லைன்வுட் மஸ்ஜித் பள்ளிவாசலில் 110 பேர் வரையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் இடம்பெற்ற விசாரணையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ள அந்நாட்டு பிரதமர் நியூஸிலாந்திற்கு இது ஒரு இருண்ட நாள் என தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து ஊடகங்களை சந்தித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் இது ஒரு கொடூரமான வன்முறை; பல உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் நியூசிலாந்து பிரஜை ஆவார். இது ஒரு தீவிர வலதுசாரி வன்முறை என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக நியூஸிலாந்தின் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.