பா.ஜ.வின் தேர்தல் முழக்கம் ‘சாத்தியமாக்குபவர் மோடி’: சொல்கிறார் அருண்ஜெட்லி
புதுடெல்லி: ‘சாத்தியமாக்குபவர் மோடி’ என்ற முழக்கத்தை இந்த தேர்தலுக்கு பா.ஜ தேர்ந்தெடுத்துள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் பா.ஜ பிரசார பிரிவுக்கு பொறுப்பாளராக இருப்பவர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. அதனால், அவர் பா.ஜ கொள்கைள் பற்றியும், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் பற்றியும் தனது இணைய பக்கத்தில் பக்கம் பக்கமாக கட்டுரைகள் வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள ‘அஜெண்டா 2019’ 4வது பாகத்தில் கூறியிருப்பதாவது:கடந்த 5 ஆண்டுகளில் ஓய்வில்லாமல் பணியாற்றியவர் பிரதமர் மோடி. அதனால் தோற்கடிக்க முடியாதவர் என்பதை அவர் கடந்த 5 ஆண்டுகளில் நிருபித்துள்ளார். எளிதில் கற்றுக் கொள்ளும் திறன்படைத்த மோடி, சிக்கலான விஷயங்களில் தெளிவாகவும், உறுதியாகவும் சீக்கிரமாகவும் முடிவு எடுக்கும் திறன் படைத்தவர். செயல்படக் கூடியவர் என்ற மோடியின் இமேஜை, இந்தியர்கள் பலர் அங்கீகரித்துள்ளனர். அதனால் ‘சாத்தியமாக்குபவர் மோடி’ என்ற முழக்கத்தை இந்த தேர்தலில் பா.ஜ தேர்வு செய்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா இடம் பிடித்துள்ளது. மோடியின் தலைமை மற்றும் செயல்பாட்டை, இந்த தேர்தலில் மக்கள் அங்கீகரிப்பர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.