உச்ச நீதிமன்றம் உத்தரவு தமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு பாதிப்பில்லை

தினகரன்  தினகரன்
உச்ச நீதிமன்றம் உத்தரவு தமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு பாதிப்பில்லை

புதுடெல்லி:  தமிழகத்தில் கடந்த 1993ம் ஆண்டு 69 சதவீத இடஒதுக்கீடு அமலானது. அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இது சேர்க்கப்பட்டிருந்தாலும்,  அதில் இடம் பெற்றுள்ள அனைத்து  அம்சங்களும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவையே என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.  இந்த நிலையில், சமீபத்தில் தமிழக மருத்துவ கலந்தாய்வின் போது 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதால் ஓசி பிரிவினருக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்பதால் 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என சென்னையைச்  சேர்ந்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.  மனுவை விசாரித்த நீதிமன்றம், “தமிழகத்தில் 69%இடஒதுக்கீட்டை காரணம் காட்டி மருத்துவ படிப்பில் கூடுதல் இடம் கேட்க முடியாது. மேலும் இந்த  வழக்கை பொறுத்தமட்டில் தனிப்பட்ட மாணவர்களின் இடஒதுக்கீட்டை பற்றி தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீதத்திற்கு எதிராக மனுவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை  என்பதால் அதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது’’ என தெரிவித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இருப்பினும் 69% இடஒதுக்கீடு தொடர்பான மைனர் காயத்ரியின் பிரதான வழக்கை விரைவில் இறுதி விசாரணை மேற்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து முந்தைய விசாரணையின்போது நாடு முழுவதும்  50% கடைபிடித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் எப்படி 69% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி வரப்படுகிறது என மாநில அரசு நீதிமன்றத்தில் முழு விளக்கங்களை அளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை மார்ச் 14க்கு  ஒத்திவைத்து கடந்த மாதம் 21ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து விளக்கமளிக்க தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தயாராக இருந்தனர். ஆனால் வழக்கை 6 வாரங்களுக்கு பின்னர் விசாரிப்பதாக நீதிபதிகள் நேற்று ஒத்திவைத்தனர்.  இதையடுத்து  தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் 69% இடஒதுக்கீடு பயன்பாட்டிற்கு தற்போது எந்தவித பாதிப்பும் இல்லை என தெரியவந்துள்ளது.

மூலக்கதை