தொடரை இழந்தது இந்திய அணி: கடைசி போட்டியில் ஆஸி., வெற்றி | மார்ச் 13, 2019

தினமலர்  தினமலர்
தொடரை இழந்தது இந்திய அணி: கடைசி போட்டியில் ஆஸி., வெற்றி | மார்ச் 13, 2019

புதுடில்லி: ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்திய அணி, தொடரை 2–3 என இழந்தது. கேதர் ஜாதவ், புவனேஷ்வர் போராட்டம் வீணானது. கவாஜா, ஜாம்பா கைகொடுக்க, ஆஸ்திரேலியா கோப்பையை தட்டிச்சென்றது.

இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகள் முடிவில் தொடர் 2–2 என சமநிலையில் இருந்தது. 

ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் சகால், லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு ஜடேஜா, ஷமி சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ், பெஹ்ரன்டர்ப்பிற்குப்பதில் ஸ்டாய்னிஸ், லியான் வாய்ப்பு பெற்றனர்.

கவாஜா சதம்

ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், கவாஜா ஜோடி அசத்தலான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தபோது, பின்ச் (27) ஆட்டமிழந்தார். கவாஜா ஒரு நாள் அரங்கில் இரண்டாவது சதம் எட்டினார். இவர் புவனேஷ்வர் ‘வேகத்தில்’ 100 ரன்களில் சிக்கினார்.

திருப்பம் தந்த ஜடேஜா

பின் ஜடேஜா ‘சுழலில்’ மேக்ஸ்வெல் (1) அவுட்டானார். ஷமி ‘வேகத்தில்’ ஹேண்ட்ஸ்கோம்ப் (52) அவுட்டானார். டர்னர், ஸ்டாய்னிஸ் தலா 20 ரன்களில் திரும்பினர். அலெக்ஸ் கேரியும் (3) விரைவில் ஆட்டமிழந்தார். கடைசி நான்கு ஓவரில் கம்மின்ஸ் (15), ஜியே ரிச்சர்ட்சன் (29) பவுண்டரிகளாக விளாச, அணிக்கு 42 ரன் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்தது. லியான் (1) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

மோசமான துவக்கம்

பின் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் (12) ஏமாற்றினார். ஸ்டாய்னிஸ் பந்தில் கோஹ்லி (20) சிக்க, அரங்கம் அதிர்ச்சியில் உறைந்தது. ரிஷாப் 16 ரன்களில் லியான் பந்தில் சரணடைந்தார். ரோகித் அரை சதம் கடந்தார்.

கேதர்–புவனேஷ்வர் ஆறுதல்

ஜாம்பாவின் ‘சுழல்’ வலையில் முதலில் விஜய் சங்கர் (16) ஆட்டமிழந்தார். மீண்டும் வந்த ஜாம்பா இம்முறை இரட்டை ‘அடி’ கொடுத்தார். 29வது ஓவரில் ரோகித் (56), ஜடேஜாவை (0) அவுட்டாக்கினார். பின் கேதர் ஜாதவ், புவனேஷ்வர் ஜோடி போராடியது. மேக்ஸ்வெல், லியான் பந்துவீச்சில் ஜாதவ் பவுண்டரி அடித்தார். ஜாம்பா பந்தை புவனேஷ்வர் சிக்சருக்கு பறக்கவிட, இந்திய ரசிகர்கள் முகத்தில் லேசான நம்பிக்கை தெரிந்தது. 7வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில், கம்மின்ஸ் ‘வேகத்தில்’ புவனேஷ்வர் (46) சிக்கினார். ரிச்சர்ட்சன் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை ஜாதவ் அடித்தார். பவுண்டரி எல்லையில் இருந்த மேக்ஸ்வெல் ‘கேட்ச்’ பிடிக்க ஜாதவ் (44) சோகத்துடன் திரும்பினார். ஷமி (3), குல்தீப் (8) விரைவில் கிளம்ப, இந்திய அணி 50 ஓவரில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ஜாம்பா அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

இத்தொடரின் மூன்று, நான்காவது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா நேற்றும் அசத்த, ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.

 

மூலக்கதை