பிரெக்ஸிற் விவகாரத்தால் பிரித்தானிய வர்த்தகர்களுக்கு ஏற்பட்டுள்ள சோகம்!
உடன்பாடற்ற பிரெக்ஸிற் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் பிரித்தானிய வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேறுவது தொடர்பாக கொண்டு வரப்பட்ட பிரெக்ஸிற் வாக்கெடுப்பு இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ள நிலையில் வர்த்தகர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
”வர்த்தகம், விற்பனை போன்ற பல விடயங்களை கவனத்தில் கொண்டு பிரெக்ஸிற் தொடர்பான முடிவுகள் எட்டப்பட வேண்டும். இல்லையெனில் பிரித்தானிய அரசு மீது பிரித்தானியர்கள் அதிருப்தி அடைவார்கள். நான் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுடன் வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றேன். இந்நிலையில் உடன்பாடற்ற பிரெக்ஸிற் இடம்பெற்றால் பெரிதும் பாதிக்கப்படுவேன் என பிரித்தானிய நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரித்தானியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பலரும் தமது எதிர்காலம் குறித்து கவலை அடைந்துள்ளனர். பிரெக்ஸிற்றினால் முன்னெப்போதும் இல்லாத அளவில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உடன்பாடற்ற பிரெக்ஸிற் இடம்பெறுமானால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவுக்கு பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் எழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொருட்களின் விலை அதிகாரிக்குமென பிரித்தானிய வங்கிகள் எச்சரித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இறக்குமதி கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதால் 5 முதல் 10 வீதமாக கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மார்ச் 29 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தமின்றி வெளியேறுவது தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(வியாழக்கிழமை) வாக்களிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.