இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

கலிபோர்னியா: இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் முதல் சுற்றில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார். கலிபோர்னியாவில் இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் பிஎன்பி பாரிபாஸ் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் நேற்று நடந்த முதலாம் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சும், ஜெர்மனியின் பிலிப் கோல்ஷ்ரெப்பரும் மோதினர். ஜோகோவிச் ஏற்கனவே 5 முறை பிஎன்பி பாரிபாஸ் ஓபன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய மோதலில் முதலில் இருந்தே ஜெர்மனிய வீரர் கோல்ஷ்ரெப்பர் ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் எளிதாக அவர் கைப்பற்றினார்.

2வது செட்டில் போராட்ட குணத்தை வெளிப்படுத்துவார் ஜோகோவிச் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கையை பொய்யாக்கும் விதத்தில் இருந்தது ஜோகோவிச்சின் ஆட்டம்.

அந்த செட்டையும் 6-4 என்ற கணக்கில் கோல்ஷ்ரெப்பர் கைப்பற்ற, நேர் செட்களில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.

ஆட்டம் முடிந்த பின்னர் கோல்ஷ்ரெப்பர் கூறுகையில், ‘‘இது எனது டென்னிஸ் வாழ்வின் மிகச் சிறந்த வெற்றி.

நம்பர் 1 வீரரை நேர் செட்களில் வீழ்த்தியுள்ளேன் என்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நம்பிக்கையுடன் அடுத்த சுற்றுகளில் ஆட இந்த வெற்றி உதவும்’’ என்று தெரிவித்தார்.

நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர்கள் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகியோரும் நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 2ம் சுற்று போட்டிகளில் முன்னணி வீராங்கனைகள் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் உக்ரேனின் ஸ்விடோலினா ஆகியோர் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

.

மூலக்கதை