ஓவியா மீது போலீசில் புகார்
பெண் இயக்குனர் அனிதா உதீப், இயக்கத்தில் ஓவியா நடித்த படம் 90 எம்எல். இதில் பெண்கள் மது அருந்தும் காட்சி, புகை பிடிக்கும் காட்சி, கஞ்சா பயன்படுத்தும் காட்சி, லிப் லாக் முத்தக் காட்சி, படுக்கை அறை காட்சிகள் தாராளமாக இடம்பெற்றிருந்தது. படத்தின் கதையும் ஆபாச கருத்தை கொண்டதாக இருந்தது.
படத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆபாசமாக நடித்த ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவி ஆரிபா ரசாக், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் வெளியாகி உள்ள 90 எம்எல் திரைப்படம் தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளது. படத்தில் இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை தங்களது கலாச்சாரத்திற்கு எதிராக செயல்பட தூண்டும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. குறிப்பாக, மது அருந்துவது, புகைப்பிடிப்பது, படுக்கை அறை ரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் பேசுவது, ஆபாச வசனங்கள் போன்றவை இப்படத்தில் அமைந்துள்ளது.
பாலியல் குற்றம் நடக்க 90 எம்எல் திரைப்படம் தூண்டும் வகையில் உள்ளது. குற்றவாளிகளை உருவாக்குவது இதுபோன்ற திரைப்படங்கள்தான் என்று இந்திய தேசிய லீக் கட்சி கருதுகிறது. எனவே, இந்த திரைப்படத்தை தடை செய்து, திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ஓவியா உள்ளிட்ட நடிகர், நடிகைகள், இயக்குநர் அனிதா உதீப் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.