ராணுவத்திற்கான நிதியை 7.5 சதவீதம் உயர்த்திய சீனா...177 பில்லியன் டாலர் ஒதுக்கீடு
பீஜிங்: சீனா அரசு ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை 7. 5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன்படி இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட் பட்ஜெட்டில் ராணுவத்திற்காக 177 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சீனா அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் ராணுவத்திற்கான நிதி அதிகரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.
இந்த ஆண்டுக்கான வரைவு பட்ஜெட் சீன நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 177. 61 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டைவிட 7. 5 சதவீதம் அதிகம் ஆகும். இதன்மூலம், அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட்டான 200 பில்லியன் டாலரை சீனா நெருங்கி உள்ளது.
கடந்த ஆண்டுகளை பொறுத்த வரையில் 2016ம் ஆண்டு 7. 6 சதவீதமும், 2017ம் ஆண்டு 7 சதவீதமும், 2018ம் ஆண்டு 8. 1 சதவீதமும் ராணுவத்திற்கான நிதியை சீனா அதிகரித்திருந்தது.
சீனாவின் ராணுவ பட்ஜெட் இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகம்.
இந்தியா இந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 3. 18 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தது. இது கடந்த ஆண்டைவிட 6. 87 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக சீனா தனது ராணுவத்தில் முக்கிய சீர்திருத்தங்களை செய்துள்ளது.
வெளிநாடுகளிடையே செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் கடற்படை மற்றும் விமானப்படையை விரிவாக்கம் செய்துள்ளது. ராணுவத்தின் (பிஎல்ஏ) துருப்புகளை மூன்று லட்சமாக குறைத்துள்ளது.
இவ்வாறு படைவீரர்களை குறைத்தபோதிலும், 2 மில்லியன் வீரர்களுடன் சீன ராணுவம் உலகின் பெரிய ராணுவமாக திகழ்கிறது. இது தொடர்பாக சீன ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, மற்ற நாடுகளை மிரட்ட ராணுவத்திற்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கருத கூடாது.
ராணுவத்திற்கு தேவையான நிதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
.