பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் தீ

தினகரன்  தினகரன்
பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் தீ

சாம்ராஜ்நகர்: பந்திப்பூர் புலிகள் சரணாலய வனப் பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு 500 ஏக்கர் நிலம் தீயில் எரிந்து நாசமானது.கர்நாடகாவில் சாம்ராஜ் நகர் மாவட்டம், பந்திப்பூர் புலிகள் சரணாலய வனப் பகுதியில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில், தீ மளமளவென பரவி, கெம்பேபுரா. கவுரிகல்லு பெட்டா உள்ளிட்ட வனப்பகுதிகளில்  உள்ள செடிகள், மரங்கள், மூலிகை செடிகள் கருகி நாசமானது. வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருபக்கம் காட்டு தீ அணைக்கப்பட்டு வந்த நிலையில், மறுபக்கம் பிலிகிரி ரங்கன பெட்டா புலிகள் பாதுகாப்பு வனப்பகுதி, புனஜனூரு  வனப்பகுதியில் தீ ஏற்பட்டது. அதை அணைக்கும் பணியிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். மொத்தத்தில் பந்திப்பூர் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயால் 500 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசமானது.இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘‘வனப்பகுதிக்குள் வரும் மர்ம நபர்கள் காட்டு பகுதியில் தீ வைத்துள்ளதால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. வனப்பகுதிக்கு தீவைத்த ‘மர்ம நபர்களை கண்டு பிடித்து  சட்டத்தின் முன் நிறுத்துவோம்’’ என்றனர்.

மூலக்கதை