ரூ.2,000 திட்டத்துக்கு... புதிய படிவம் வெளியீடு!

தினமலர்  தினமலர்
ரூ.2,000 திட்டத்துக்கு... புதிய படிவம் வெளியீடு!

திருப்பூர்:தமிழக அரசு வழங்கியுள்ள படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து, உள்ளாட்சி அலுவலகங்களில் கொடுக்கலாம் என, அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு, வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் தொழிலாளர்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்கனவே இருந்த பட்டியலை பெற்று, அதில் உள்ள பயனாளிகளின், ஆதார், வங்கி கணக்கு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல், ஏழை தொழிலாளர்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் துவங்கி வைக்கப்படுகிறது. இருப்பினும், நகரம் மற்றும் கிராமப்புறங்களில், தகுதியான ஏழை மக்கள், பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசு, வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்போர் பட்டியலில் சேர வாய்ப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு, நகரம் மற்றும் கிராமப்புறங்களுக்கான படிவங்களை வினியோகித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில், அதற்கான படிவங்களை பெற்று, தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், 'தமிழக அரசின், 2000 ரூபாய் திட்டத்தில், ஏற்கனவே பட்டியலில் இருந்த பயனாளிகளுக்கு மட்டும், நிதி உதவி கிடைக்கும். விடுபட்ட ஏழை, எளிய மக்கள், உள்ளாட்சி அலுவலகங்களில், விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம்' என்றனர்.

மூலக்கதை