அதிக சம்பளம் கேட்டு பிடிவாதம்: படங்களில் இருந்து நீக்கப்படும் ரகுல் ப்ரீத்தி சிங்

தினமலர்  தினமலர்
அதிக சம்பளம் கேட்டு பிடிவாதம்: படங்களில் இருந்து நீக்கப்படும் ரகுல் ப்ரீத்தி சிங்

கில்லி என்ற கன்னடப் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத்தி சிங். தடையறத் தாக்க படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு புத்தகம் படத்தில் நடித்தார். இதுவரையில் அவர் சாதாரண நடிகைதான். வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் என்ற தெலுங்கு படம் அவரை உயர்த்தி பிடித்தது. அதன் பிறகு தெலுங்கில் முன்னணி நடிகை ஆகி, அங்குள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இடையில் என்னமோ ஏதோ என்ற தமிழ் படத்தில் நடித்தாலும் அது அவருக்கு கைகொடுக்கவில்லை. தெலுங்கில் வருடத்திற்கு குறைந்தது 4 படங்களிலாவது நடித்தார்.

ஸ்பைடர் மூலம் மீண்டும் தமிழக்கு வந்தார் அது அவருக்கு பலன் தரவில்லை. அதன் பிறகு நடித்த தீரன் அதிகாரம் ஒன்று அவருக்கு கை கொடுத்தது. ஆனால் தேவ் மீண்டும் கை கழுவியது. இப்போது சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும், பெயரிடப்படாத சிவகார்த்திகேயன் படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் எப்படி இருந்தாலும் தெலுங்கில் டாப்பில்தான் இருக்கிறார்.

ஆனால் தற்போது அவர் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி இருக்கிறார். இத்தனைக்கும் அவரது சமீபத்திய தெலுங்கு படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார். தமிழில் வெளிவந்த ராட்சசன் தெலுங்கு ரீமேக்கில் பெல்லகொண்ட சீனிவாசராவ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது அவர் நீக்கப்பட்டு ராஷி கண்ணா நடிப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல நாக சைதன்யா நடிக்கும் வெங்கி மாமா படத்திலிருந்தும் ப்ரீத்தி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நபா நடாஷா நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை ரகுல் ப்ரீத்தி சிங் மறுக்கிறார். எதையும் தயாரிப்பாளர் முறைப்படி அறிவிக்கட்டும். எந்த படத்திலிருந்தும் நான் நீக்கப்படவில்லை. இந்திப் படம் உள்பட இப்போது 5 படங்கள் என் கைவசம் இருக்கிறது" என்கிறார்.

மூலக்கதை