காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் உடல் அடக்கம் ராணுவ மரியாதையுடன் நடந்தது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான  2 தமிழக வீரர்கள் உடல் அடக்கம், அவர்களது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நடந்தது.  பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் , உடையார் பாளையம் தாலுகா கார்குடியைச் சேர்ந்த சின்னையன்-சிங்காரவள்ளி மகன் சிவசந்திரன் (வயது 33), தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த சவலாப்பேரியைச் சேர்ந்த கணபதி-மருதம்மாள் மகன் சுப்பிரமணியன் (28) ஆகிய 2 பேரும் வீரமரணம் அடைந்தனர்.  தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு தமிழக வீரர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டன.

 பின்னர் சிவசந்திரனின் உடல், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து மற்றொரு  விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட சுப்பிரமணியனின் உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சியினர், காவல்துறை உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
 
தொடர்ந்து ராணுவ வாகனத்தில் சுப்பிரமணியனின் உடல் அவரது சொந்த ஊரான சவலாப்பேரி கிராமத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது உடலைப் பார்த்து அவரது மனைவி கிருஷ்ணவேணி, பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் கதறி அழுதனர். 

சுப்பிரமணியன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். 

முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.  மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சுப்பிரமணியன் உடல், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். இதையொட்டி சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

திருச்சி விமான நிலையம் வந்த சிவச்சந்திரன் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டது. தொடர்ந்து முப்படை வீரர்கள் சிவசந்திரன் உடலுக்கு மரியாதை செலுத்தினர். 

 இதையடுத்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஆனந்த குமார் ஹெக்டே ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அருகில் நின்றிருந்த சிவசந்திரனின் மைத்துனர் அருண், உறவினர்கள் ஜெயபால், குணவேலு, கண்ணன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர்கள் ஆறுதல் கூறினர். அவர்களை பார்த்து, உறவினர்கள் கதறி அழுதனர்.

 தொடர்ந்து முக்கியப் பிரமுகர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முப்படை வீரர்கள் மற்றும் போலீசார் வீர வணக்கம் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பொது மக்கள், இளைஞர்கள் திரண்டு வந்து, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் 12.30 மணியளவில் சிவசந்திரனின் உடல், ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

திருச்சியில் இருந்து ராணுவ வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சிவசந்திரனின் உடல் மாலை 4.30 மணி அளவில் கார்குடி வந்து சேர்ந்தது. அங்கு அவரது வீட்டு முன் உறவினர்கள் ஒரு சில சடங்குகளை செய்த பின்னர் அருகில் உள்ள திடலில் அமைக்கப்பட்ட ஷாமியானா பந்தலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்டு சென்றார்.பின்னர் பேரிகார்டு தடுப்பில் பொதுமக்கள், உறவினர்கள் வரிசையாக சென்று சிவசந்திரன் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினர். அதனை தொடர்ந்து வீட்டிற்கு பின்புறம் உள்ள அவர்களுக்கு சொந்தமான வயலில் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்ட சமாதிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் நடந்தது. முன்னதாக சிவசந்திரன் சடலத்தின் மீது போர்த்தி இருந்த தேசியக் கொடியை மடித்து அவரது தந்தை சின்னையனிடம் ஐஜி வழங்கினார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் அரசு நிதி உதவி ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை சிவசந்திரனின் மனைவி காந்திமதியிடம் வழங்கினர். மேலும் அவருக்கு அரசு சார்பில் நர்ஸ் பணி வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். அப்போது காந்திமதி கண்ணீர் விட்டு கதறி அழுதார். 

இதேபோல, சுப்பிரமணியன் இறுதிசடங்கில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசு சார்பில் 20 லட்சத்திற்கான காசோலையை சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணியிடம் வழங்கினார். 

சிவசந்திரன் உடல் அடக்கம் நடந்தபோது, மகன் சிவமுனியன் மற்றும் சிவசந்திரனின் தந்தை சின்னையன் ஆகியோர் ராணுவ வீரர் உடை அணிந்து இறுதி மரியாதை செய்த காட்சி அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது.

மூலக்கதை