ஆம்பூர் காப்புக்காடுகளில் நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆம்பூர் காப்புக்காடுகளில் நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரம்

ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி மற்றும் பைரப்பள்ளி கிராமத்தை ஒட்டி உள்ளது துருகம் காப்புக்காடுகள். ஆந்திர கவுண்டன்ய வனவிலங்குகள் சரணாலயம் காப்பு காடுகளை ஒட்டி உள்ளதால் அவ்வப்போது வனத்துறையினரும், நக்சல் தடுப்பு போலீசாரும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்படி சிறப்பு இலக்கு படையினர் (எஸ்டிஎப்), நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வனத்துறையினர் காப்புக்காடுகள் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். நேற்று முன்தினம் சாரங்கல் குந்தேலி மூலை பகுதியில் தொடங்கிய தேடுதல் வேட்டை ஊட்டல் தேவஸ்தானம் பகுதி வரை நடந்தது.

இரவு முழுவதும் காப்புக்காடுகளில் தங்கி முகாமிட்டனர். இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளதா? துப்பாக்கி சத்தம் போன்றவைகள் குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று காலை நக்சல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் இளவரசன் தலைமையில் தேடுதல் வேட்டையை துவக்கினர்.

இதில் சிறப்பு இலக்கு படையினர் (நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வனத்துறையினர்) 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டை ஊட்டல் தேவஸ்தானம் தொடங்கி தூலால எர்ரகுண்ட, ஜேலார் பண்ட, சேஷவன் கிணறு, சாணி தொம்மக்குட்டை, தவக்களை குண்டு, சின்ன போடி பண்டை, பெரிய போடி பண்டை, ஆம்பூரான் பண்டை, ஜெல்தி வழியாக கொத்தூர் கனவாய் வரை தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த வேட்டையில் யாரும் பிடிபடவில்லை.

இதையடுத்து தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

.

மூலக்கதை