அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடு பா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் தே.மு.தி.க.வுடன் இழுபறி

PARIS TAMIL  PARIS TAMIL
அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடு பா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் தே.மு.தி.க.வுடன் இழுபறி

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு

இதனால் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு செய்வது, வேட்பாளர் தேர்வு போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்று உள்ளன. கிட்டத்தட்ட தி.மு.க. தனது அணியை இறுதி செய்து விட்ட நிலையில், அ.தி.மு.க. அணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க., பாரதீய ஜனதா, த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தமிழக பாரதீய ஜனதா கூட்டணி பொறுப்பாளரான மத்திய மந்திரி பியூஸ் கோயல் சென்னை வந்து அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

அ.தி.மு.க. பக்கம் சாய்ந்த பா.ம.க.

இதைத்தொடர்ந்து பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியது.

பா.ம.க.வுடன் அ.தி.மு.க. தரப்பில் முக்கிய நிர்வாகிகளும், தி.மு.க. தரப்பில் துரைமுருகனும், கனிமொழி எம்.பி. யும் மாறி, மாறி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததால், பா.ம.க. எந்த அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த பரபரப்பான சூழ் நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை, தியாகராயநகரில் உள்ள அன்புமணி ராமதாஸ் இல்லத்தில் அமைச்சர் தங்கமணி நேற்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, அ.தி.மு.க-பா.ம.க. கூட்டணி ஏற்படுவது உறுதியானது.

அ.தி.மு.க. கூட்டணியில் சேரவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து, கூட்டணியை உறுதி செய்யவும் டாக்டர் ராமதாஸ் விருப்பம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பொதுவான இடத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவரங்களை உறுதி செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் இரு தரப்பு தலைவர்களும் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

டாக்டர் ராமதாஸ்

அதன்படி நேற்று காலை 10.20 மணிக்கு அந்த ஓட்டலுக்கு முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும், ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் வந்தனர்.

அவர்களை தொடர்ந்து 10.28 மணிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து, வரவேற்றனர். பின்னர் அவர்கள் தனி அறையில் சுமார் 10 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

மூலக்கதை