அனில் அம்பானி குற்றவாளி..... எரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு செய்தது நிரூபணம்: உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.550 கோடி திருப்பிச்செலுத்தாத வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் 4 வாரத்திற்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.453 கோடியை செலுத்தாவிட்டால் சிறை செல்ல நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தொலைத்தொடர்பு கருவிகள் வாங்கியதற்காக எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.1600 கோடி செலுத்த வேண்டி உள்ளது. இதில் முதல் தவணையாக ரூ.550 கோடியை செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட தேதியில் தவணை தொகையை ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்தவில்லை. இதனை அடுத்து ரிலையன்ஸ் தலைவர் அனில் அம்பானி, அதிகாரிகள் சதீஷ் சேத், சாயா விரானி ஆகிய மூன்று பேர் மீதும் எரிக்சன் இந்தியா நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் நாரிமன் மற்றும் வினீத் சரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனில் அம்பானி நீதிமன்ற அவமதிப்பு செய்தது நிரூபணம் ஆனதால் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.453 கோடி தொகையை செலுத்தாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என எச்சரித்தனர். மேலும் நீதிமன்ற உத்தரவை ஏற்று நடக்கும் எண்ணம் அனில் அம்பானியின் ஆர்-காம் நிறுவனத்துக்கு இல்லை என காட்டமாக தெரிவித்தனர்.