பணமோசடி வழக்கு: மாலத்தீவு மாஜி அதிபர் கைது
மாலே, ஆசிய நாடான, மாலத்தீவில், பண மோசடி வழக்கில், முன்னாள் அதிபர், அப்துல்லா யாமீன் கைது செய்யப்பட்டார்.
கடந்த, 2013 முதல் ஐந்து ஆண்டுகள், அந்நாட்டு முற்போக்கு கட்சியைச் சேர்ந்த, அப்துல்லா யாமீன், மாலத்தீவு அதிபராக பதவி வகித்த போது, பல ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 2018, செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், யாமீன் தோல்வியடைந்தார். மாலத்தீவு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, இப்ராஹிம் முகமது சோலிஹ்
அதிபரானார்.
அதை தொடர்ந்து, அதிபர் தேர்தலில் தோல்வியடைவதற்கு முன், ரூ.176 கோடி ஊழல் செய்ததாக, யாமீன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது; அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், யாமீனை கைது செய்யும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, யாமீனை, போலீசார் கைது செய்தனர்.