தன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா

தினமலர்  தினமலர்
தன் சொந்த வாழ்க்கையை இயக்கப் போகும் கங்கனா

பாலிவுட் திரையுலகில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் திரையுலக வாழ்க்கையில் பயணிப்பவர் கங்கனா ரணவத். சில முக்கிய பாலிவுட் பிரபலங்களைப் பற்றி ஏற்கெனவே சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அவரது திரையுலகப் பயணத்தில் பல பிரச்னைகளையும், சவால்களையும், தடைகளையும் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த 'மணிகர்ணிகா' படமும் சர்ச்சைக்குரிய படமாக அமைந்தாலும், படத்திற்கு நல்ல பெயர் கிடைத்து அவரையும் ஒரு இயக்குனராக அங்கீகாரம் செய்துள்ளது.

'மணிகர்ணிகா' படத்திற்கு கதை எழுதிக் கொடுத்து 'பாகுபலி' படங்களின் எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத், அடுத்து கங்கனாவின் சொந்த வாழ்க்கையைப் பற்றி கதை எழுத உள்ளாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் கங்கனாவே இது பற்றி தெரிவித்துள்ளார். விஜயேந்திர பிரசாத், கங்கனாவிடம் வலியுறுத்தி கதையை எழுத சம்மதம் வாங்கிவிட்டாராம். அந்தப் படத்தை தானே சொந்தமாக இயக்கப் போவதாகவும் கங்கனா கூறியிருக்கிறார்.

இந்த வருடக் கடைசியில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார்களாம். கங்கனாவின் திரையுலக வாழ்க்கையில் சில பிரபலங்களுடனான சர்ச்சைகள் இருப்பதால் அவை பற்றியும் வெளிப்படையாக படத்தில் சொல்லப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை