அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்!
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் எழுப்ப வேண்டிய நிதியை பெறுவதற்காக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அவசரநிலை பிரகடனத்தில் கையெழுத்திட இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக சட்ட விரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தல் நீடிப்பதால், இதனைத் தடுக்க எல்லைச் சுவர் எழுப்ப வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை ஊடகத் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே கூறியது போன்று எல்லைச் சுவர் எழுப்புவதற்காக தேவைப்படும் நிதி மசோதாவில் கையெழுத்திட உள்ளார்.
இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் மிட்ச் மெக்கோனெல்,
நான் ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தேன். சுவர் எழுப்புவதற்கான நிதியை பெறுவதற்கான மசோதாவில் அவர் கையெழுத்திட இருக்கிறார்.
நாடாளுமன்றத்தின் இதர உறுப்பினர்களிடம் டிரம்ப்பின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தேன் என்றார்.
அதேசமயம், ஜனாதிபதி டிரம்ப்பின் இந்த முடிவை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து செனட் அவையின் சிறுபான்மையினத் தலைவர் சக் ஷ்க்யூமெர், அவைத் தலைவர் நான்சி பெலோசி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,
இது சட்டத்துக்கு முரணானது. எல்லைச் சுவர் கட்டுவதற்கான பணம் மெக்சிகோவிடம் இருந்து பெறப்படும் என்று முன்னர் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத டிரம்ப்,
தற்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். இது தவறான முடிவாகும். நாட்டின் அரசியலமைப்பு அதிகாரங்களை காப்போம் என்று கூறப்பட்டுள்ளது.