சீனாவும், இந்தியாவும் பூமியை பசுமையாக்கி வருவதாக நாசா பாராட்டு

தினகரன்  தினகரன்
சீனாவும், இந்தியாவும் பூமியை பசுமையாக்கி வருவதாக நாசா பாராட்டு

வாஷிங்டன் : உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான இந்தியாவும், சீனாவும் தற்போது இயற்கையின் பசுமை அதிகரிப்பிலும் முன்னணி நாடுகளாக திகழ்ந்து வருகின்றன என்று நாசா பாராட்டு தெரிவித்துள்ளது. செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதனை உறுதிபடுத்தியுள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் 20 லட்சம் சதுர மைல்கள் தொலைவிற்கு மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்றும், இதனால் அமேசான் மலைக்காடுகள் அளவிற்கு பசுமை அதிகரித்துள்ளதுஎன்று நாசா தெரிவித்துள்ளது. அதே சமயம் இதுவரை அழிக்கப்பட்டுள்ள காடுகளே அதிகம் என்ற கருத்தையும் நாசா முன்வைத்துள்ளது. மரம் வளர்க்கும் திட்டம், வேளாண் தொழில் உள்ளிட்ட அடுத்தடுத்த திட்டங்களை இந்தியா மற்றும் சீனா மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. காடுகள் வளர்ப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவு சீனாவிலும், இந்தியாவிலும் தான் காணப்படுகிறது என்றும், இருப்பினும் ஒட்டுமொத்த உலளவில் பார்க்கும்போது இது வெறும் 9 சதவிகிதம் மட்டுமே இருப்பதால் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் விளைவுகளை தற்போது தடுக்க முடியாது என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இரண்டு செயற்கைக்கோள்கள் மூலம் 2000 மற்றும் 2017ம் ஆண்டில் ஸ்பெக்ரோ ரேடியோ மீட்டர் என்ற நுண்சாதனம் வழியான புவியின் மேற்பரப்பை நாசா ஆராய்ந்தது. அதன்மூலம் பசுமைக் காடுகள் அதிகரிப்பில் சுமார் நான்கில் ஒரு பங்கை சீனா மட்டுமே அளித்துள்ளது தெரியவந்துள்ளது. உலகளவில் உள்ள காடுகளின் வளர்ச்சி 42 சதவிகிதமாகவும், வயல் வெளிகளின் வளர்ச்சி 32 சதவிகிதமாகவும் இருக்கிறது என்று நாசா குறிப்பிட்டுள்ளது.காடுகள் வளர்ப்பை சீனா அதிகரித்துள்ளதன் மூலம் தற்போது காடுகள் பாதுகாப்பாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் காற்றுமாசு, மண் அரிப்பு போன்ற பாதிப்புகளை ஓரளவுக்கு சரி செய்ய முடியும் என்றும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் உணவு உற்பத்தியிலும் சீனாவும், இந்தியாவும் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரே நிலத்தில் பல்வேறு பயிர்களை பயிரிடும் முறைகளே இரண்டு நாடுகளும் பின்பற்றி வருவதே இதற்கு காரணம் என்றும், இந்த முறைகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே என்று நாசா கூறியுள்ளது. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் கடந்த 2000 ஆண்டிலிருந்து 35 முதல் 40 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது என்றும் இந்த வகை விளைச்சல் இரண்டு நாடுகளின் மக்கள் தொகைக்கு போதுமானதாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. வயல் வெளிகள் காடுகள் இருக்கும் பகுதிகளில் கரியமில வாயுகள் படிவது வெகுவாக குறைந்துள்ளதாக நாசாவின் செயற்கைகோள் படங்கள் விளக்குகின்றன.

மூலக்கதை