படிக்கட்டில் பயணம் செய்தபோது விபரீதம் பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவன் சாவு: பொன்னேரி அருகே பரிதாபம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
படிக்கட்டில் பயணம் செய்தபோது விபரீதம் பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவன் சாவு: பொன்னேரி அருகே பரிதாபம்

பொன்னேரி: படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறிவிழுந்த மாணவன், பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்.

இவரது மகன் அற்புதராஜ் (13). இவர், பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் இன்று காலை 8. 30 மணியளவில் பள்ளி செல்வதற்காக,கும்மிடிப்பூண்டியில் இருந்து காட்டாவூர் வழியாக பொன்னேரிக்கு பஸ்சில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால், பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் நின்றபடி அற்புதராஜ் பயணம் செய்ததாக தெரிகிறது.



பொன்னேரி, தேரடி வளைவில் பஸ் திரும்பியபோது, படிக்கட்டில் நின்றிருந்த அற்புதராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அற்புதராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் பொன்னேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அற்புதராஜின் சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர், கண்டக்டரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை