நாடு முழுவதும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கணக்கெடுப்பு: 24 போலி பல்கலை சான்றிதழ் செல்லாது
* டெல்லியில் 2 பல்கலைகழகங்கள் மீது வழக்குப்பதிவு
* விளக்கம் கேட்டு நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ்
புதுடெல்லி: நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 24 போலி பல்கலைகழகங்கள் கண்டறியப்பட்ட நிலையில், அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் 2 பல்கலைகழகங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்கள் வழங்கும் கல்வி சான்றிதழ்கள் செல்லாது என யுஜிசி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுவருவதாக சமீபகாலங்களாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைத் தன்மையை அறிய தீவிர விசாரணையில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இறங்கியது. அதில் அங்கீகாரம் பெறாமல் நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகக் கண்டறியப்பட்டது.
அதையடுத்து அந்தப் போலியான பல்கலைக்கழகங்களின் பட்டியலை தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டிருப்பதோடு, இந்தக் கல்வி நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழ்கள் செல்லாது என்றும் அறிவித்துள்ளது.
அவற்றில், உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 8, டெல்லியில் 7, மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் தலா 2, பீகார், கர்நாடகம், கேரளா, மராட்டியம், புதுச்சேரி ஆகியவற்றில் தலா ஒன்றும் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சத்யபால்சிங் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில், ‘பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் நடத்திக்கொண்டு, மக்களை ஏமாற்றுகிற விதத்தில் தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருகிற போலி பல்கலைக்கழகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
2 பல்கலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
யுஜிசி வௌியிட்ட அறிவிப்பில், ‘யுஜிசி சட்டம் 1956 பிரிவு 22(1) இன் படி, மத்திய அல்லது மாநில அரசு சட்டத்தால் உருவாக்கப்படும் பல்கலைக்கழகங்கள்,
யுஜிசி சட்டம் பிரிவு (3-ன்) கீழ் அனுமதிக்கப்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அல்லது நாடாளுமன்ற சட்டத்தால் உருவாக்கப்படும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை மட்டுமே பட்டப் படிப்புகளுக்கான பட்டத்தை வழங்க முடியும்.
இந்தச் சட்டங்களின்படி உருவாக்கப்படாமல், யுஜிசியின் அங்கீகாரம் பெறாமல் நாடு முழுவதும் இயங்கி வரும் 24 கல்வி நிறுவனங்கள் போலி பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்படுகின்றன. அக்கல்வி நிறுவனங்கள் பட்டங்கள் வழங்கத் தகுதியில்லாதவை. அந்த நிறுவனங்கள் அளிக்கும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்’ என அறிவித்துள்ளது.
2 பல்கலை.
மீது வழக்கு
நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ள யுஜிசி, 2 போலி பல்கலைக்கழகங்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இைவ, டெல்லியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் பிளானிங் அண்ட் மேனேஜ்மென்ட் (ஐஐபிஎம்) மற்றும் மேற்குவங்கத்தில் செயல்பட்ட பயோ கெமிக் எஜுகேஷன் கிரான்ட் கமிஷன் இன் நாடியா ஆகிய நிறுவனங்களாகும்.